படங்களில் நடிக்க எனக்குத் தடையா..? அப்படி எந்தத் தகவலும் வரலையே! - ஸ்ருதி ஹாஸன்
சென்னை: படங்களில் நடிக்க எனக்குத் தடை விதிக்கப்பட்டதாக செய்திகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். எனக்கோ, ராஜ்கமல் அலுவலகத்துக்கோ அப்படி எந்த தகவலும் நோட்டீசும் வரவில்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடிக்கும் புதுப் படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்தனர். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில், இப்படத்தில் நடிக்க முடியாது என திடீரென மறுத்துவிட்டார் ஸ்ருதி.

புகார்
எனவே ஸ்ருதிஹாசன் மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் பிவிபி சினிமா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்ததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்குப் பதிவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்தார். ஸ்ருதி மீது வழக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தும்படி போலீசுக்கும் உத்தரவிட்டனர். ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஸ்ருதி மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் நேரில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மறுப்பு
ஆனால் இந்த தகவல்களை ஸ்ருதிஹாசன் மறுத்துள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கோ அல்லது அவரது கால்ஷீட் விவகாரங்களைக் கவனிக்கும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கோ இதுவரை நீதிமன்றத்திலிருந்து எந்த விதமான நோட்டீஸ்களும் வரவில்லை என்று ஸ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.

தகவல் இல்லை
ஸ்ருதிஹாஸன் மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள தகவலும் தனக்கு வரவில்லை என்று ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











