வெற்றி மரியாதைக்கு உரியது, தோல்வி மதிப்புக்கு உரியது - அனுஷ்கா
சென்னை: வெற்றி மரியாதைக்கு உரியது, தோல்வி மதிப்புக்கு உரியது என்று தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் அனுஷ்கா ஷெட்டி கூறியிருக்கிறார்.
நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகின்றன. 2005 ம் ஆண்டில் சூப்பர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிப்புலகில் காலடி பதித்த அனுஷ்கா இந்த 2015 ம் ஆண்டுடன் சுமார் 10 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறார்.
10 வருட திரைவாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகள் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில அனுஷ்கா நினைவு கூர்ந்திருக்கிறார்.

ரெண்டு
மாதவன் நடித்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா. முதல் 4 வருடங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் அனுஷ்கா நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

அருந்ததி
2009 ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அருந்ததி திரைப்படம் அனுஷ்காவிற்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. வசூலில் சாதனை நிகழ்த்திய அந்தப் படத்திற்குப் பின்பு அனுஷ்காவின் திரை வாழ்க்கை ஏற்றம் பெற ஆரம்பித்தது. ஏராளமான படங்களும் குவிந்தன.

ஹிட் படங்கள்
தமிழில் தெய்வத் திருமகள், சிங்கம், சிங்கம் 2 மற்றும் தெலுங்கில் மிர்ச்சி, கலேஜா, பில்லா, வேதம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக மாறி அனுஷ்காவின் மார்க்கெட்டை சர்ரென்று உயர்த்தின.

வெற்றி - தோல்வி
தனது படங்கள் மற்றும் திரை வாழ்க்கை குறித்து அனுஷ்கா கூறும்போது "நான் சினிமாவில் 10 வருடங்களாக நடிக்கிறேன். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வெற்றி-தோல்விகளை சந்தித்தேன், தோல்வி படங்கள் மூலம் நிறைய பாடங்களை கற்றேன். வெற்றியில் சந்தோஷப்படுகிறோம் தோல்வியில் துவண்டு போகிறோம். அப்படி இருக்கக் கூடாது வெற்றி-தோல்வியை ஒன்றாக பார்க்கும் பக்குவம் வரவேண்டும்.

தோல்வி மூலமாக கற்ற பாடங்கள்
வெற்றி மரியாதைக்கு உரியது, தோல்வி மதிப்புக்கு உரியது. தோல்வி எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது. வெற்றிக்கு அவைதான் ஆதாரமாகவும் இருக்கின்றன. என் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை மட்டும் மறக்கவே மாட்டேன், எப்போதும் ஞாபகம் வைத்து இருப்பேன். அவை மீண்டும் தவறுகள் நடக்காமல் என்னை எச்சரிக்கையாக செயல்படவைக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.

ராணி அனுஷ்கா
அனுஷ்காவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. அடுத்து இவரின் நடிப்பில் ருத்ரமாதேவி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இரண்டு படங்களிலும் அனுஷ்கா ராணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி இடுப்பழகி
முன்னணி நடிகர்களுக்கு இணையாக தனது உடல் எடையை ஏற்றி, இறக்கி இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்திருக்கிறார். அடுத்ததாக பாகுபலி 2 படத்திலும் அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார். 2 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் படங்களாக தற்போது மாறியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











