பஹத்தை இழக்க விரும்பாமல்... சினிமாவை விட்டுக் கொடுத்த நஸ்ரியா!
சென்னை: பஹத் பாசிலை இழக்க விரும்பாமல் தான் சினிமாவிலிருந்து விலகி, குறைந்த வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார் நஸ்ரியா.
நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. துறு துறு கண்கள், திறமையான நடிப்பு என குறுகிய காலத்திலேயே தமிழில், திருமணம் என்னும் நிக்காஹ், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்தார்.
தமிழில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென, கடந்த 2014ம் ஆண்டு பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் நஸ்ரியா.

ஷாக்கான ரசிகர்கள்...
நஸ்ரியாவின் இந்த திடீர் முடிவு, அவரது ரசிகர்களை மட்டுமல்ல, தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறைந்த வயதில் ஏன் அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

சினிமாவிற்கு பை பை...
ஆனால், அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத நஸ்ரியா, பாசில் வீட்டு மருமகளானார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கும் பை பை சொன்னார்.

25 வயதில் திருமணம்...
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தனது திருமண முடிவு குறித்து மனம் திறந்துள்ளார் நஸ்ரியா. இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘25 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என தான் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பஹத்தை இழக்க விரும்பவில்லை...
ஆனால், பஹத் வீட்டில் அவருக்கு அவசர அவசரமாக பெண் தேடியதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் அவரது திருமணத்தை முடித்துவிட அவர்கள் திட்டமிட்டதாகவும் கூறியுள்ள நஸ்ரியா, அதனாலேயே பஹத்தை இழக்க விரும்பாமல் உடனடியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











