நடிகரையோ, சினிமா சம்பந்தப் பட்டவரையோ திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: சமந்தா
ஹைதராபாத்: நடிகரையோ அல்லது சினிமா துறையைச் சேர்ந்தவரையோ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.
நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் முன்பு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை உறுதி செய்வது போல் இருவரும் சினிமா நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றனர்.
சமீபத்தில் இவர்களது காதல் உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, தொழிலதிபர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்தி பரவியது.
இந்நிலையில், ஹைதரபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சமந்தா, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

தொழில் அதிபருடன் காதல்...?
அந்த தொழில் அதிபர் யார் என்று சொல்லுங்கள். என்ன தொழில் செய்கிறார் என்று கூறுங்கள். போன் நம்பரையும் தெரியப்படுத்துங்கள். நடிகருடன் இணைத்து பேசாமல் தொழில் அதிபரை மணக்க போகிறேன் என்று சொன்னதில் சந்தோஷம்தான்.

காதல் கீதல் இல்லை...
காரணம் நான் சினிமா நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன். தொழில் அதிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உண்டு. ஆனாலும் காதல் கீதல் எதுவும் இப்போது இல்லை. திருமணமும் இப்போதைக்கு இல்லை.

சர்ச்சைக் கருத்துக்கள் குறித்து...
என் மனதில் இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறேன். ஆனாலும் சினிமா துறையில் யாருடனும் எனக்கு விரோதம் கிடையாது. எல்லோருடனும் நட்பாகவே இருக்கிறேன்.

இந்தி படங்கள்...
இந்திக்கு போக விருப்பம் இல்லை. இரட்டை குதிரையில் சவாரி செய்ய விருப்பம் இல்லை.

முதல் இடம்... போட்டி
முதல் இடம், இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் ஹிட்டானால் அந்த நடிகைதான் நம்பர் ஒன். தோல்வி அடைந்தால் முந்தைய வெற்றிகளை எல்லாம் மறந்து ஓரத்தில் ஒதுக்கி விடுவார்கள். என்னை பொறுத்தவரை ஐந்து வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை விடவும் அழகான திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது என் அதிர்ஷ்டம்.

மூன்று நாயகிகள் படம்...
மூன்று, நான்கு கதாநாயகிகளுடன் நடிப்பது தவறல்ல. ரசிகர்களும் ஒரு படத்தில் நிறைய கதாநாயகிகள் நடிப்பதை விரும்புகிறார்கள். நான் திறமையான டைரக்டரா என்றுதான் முதலில் பார்ப்பேன். அதன்பிறகுதான் கதை, கதாநாயகன் எல்லாம். சிறந்த இயக்குனர் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கிறேன்' என இவ்வாறு அதில் சமந்தா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











