'பெண்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்'..சர்ச்சை கருத்தால் பிரச்சினையில் சிக்கிய பிரியாமணி
சென்னை: பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை. அதனால் பெண்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என நடிகை பிரியாமணி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் 30 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

சட்டக்கல்லூரி மாணவி
கேரளாவில் ஜிஷா என்ற (30) சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பிரியாமணி
இது தொடர்பாக நடிகை பிரியாமணி ''ஜிஷா கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என்பதை படிக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைக்கிறேன். பெண்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்கு செல்ல வேண்டும்.

தொடர்கதை
இந்த சம்பவம் தொடர்கதையானால் நமது சொந்த நாட்டிலேயே நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. இந்தியா பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை தெய்வமாக வணங்குவதாக கூறுகிறார்கள். பிறகெப்படி பெண்களை கற்பழித்து கொலை செய்கிறார்கள். அரபு நாடுகளைப் போல கடுமையான தண்டனைகள் இங்கே வரவேண்டும். அப்போதுதான் இந்த மாதிரி சம்பவங்கள் இந்தியாவில் குறையும் என்று கூறியிருக்கிறார்.

ஆதரவும் எதிர்ப்பும்
பிரியாமணியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நீங்கள் ஒரு நடிகையாக இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லையா? ஒரு பிரபலமாக இருந்து கொண்டு தவறான கருத்தை எப்படி நீங்கள் கூறலாம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருபுறம் நீங்கள் சரியாக சொன்னீர்கள் என பிரியாமணிக்கு ஆதரவுக் குரல்களும் எழாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











