எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தது இவர் தான்... ஜோதிகா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்
சென்னை : ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே இன்று, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை சொல்லும் கதை. மற்றொரு கிழக்கு சீமையிலே ராதிகாவாக ரசிகர்களின் நெஞ்சில் பதிந்து விட்டார் ஜோதிகா.
இந்த படத்தில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி என அனைவரும் தங்களின் கேரக்டரில் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இரா.சரவணன் இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஜோதிகா, பக்கா கிராமத்து பெண்ணாக நடித்துள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன் டும் டும் டும் படத்தில் தான் குறும்புக்கார கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். அதுவும் பாதி படத்திற்கு மேல் மாடர்ன் டிரெசிற்கு மாறி விடுவார். இருந்தாலும் நெல்லை தமிழை அழகாக பேசி நடித்திருப்பார் ஜோதிகா.

கிராமத்து பெண்ணாக ஜோதிகா
அதற்கு பிறகு உடன்பிறப்பே படத்தில் தான் முழுக்க முழுக்க கிராமத்து மொழியில் பேசி, கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த கேரக்டரில் தான் நடிப்பதற்கு உதாரணமாக இருந்தது யார், தனது கேரக்டர் எப்படி என்பது பற்றி சமீபத்தில் ஜோதிகா பேசி உள்ளார்.

எனக்கு கற்றுக் கொடுத்தது இவர் தான்
ஜோதிகா கூறுகையில், இந்த கேரக்டரில் நடிப்பதற்காக நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த நிறைய கேரக்டர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு மிகப் பெரிய ஊக்கசக்தியாக இருந்தது எனது மாமியார் தான். வீட்டில் அவரிடம் இருந்து தான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு குடும்ப தலைவியிடம் இருக்க வேண்டிய நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இவங்க தான் காரணம்
எனது கணவரின் ஒட்டுமொத்த உறவினர்களும் கோவையை சுற்றி உள்ள சிறிய கிராமங்களில் தான் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இந்த 15 ஆண்டுகளில் நான் சந்தித்த மற்ற பெண்களிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் பேசுகையில் கற்றுக் கொண்ட நிறைய விஷயங்களை இந்த கேரக்டருக்காக நான் பயன்படுத்திக் கொண்டேன்.

இதுவரை நடிக்காத கேரக்டர்
இந்த கேரக்டர் தான் இந்த படத்தில் என்னை நடிக்க தூண்டியது. இது போன்ற கேரக்டரில் இதுவரை நான் நடித்ததில்லை. பலவிதமான வயதுடைய கேரக்டரில் நடித்துள்ளதால் ஒரு நிறைவான, முழுமை அடைந்த கேரக்டரில் நடித்த ஒரு ஃபீல் கிடைக்கிறது. பெண்களின் மிகப் பெரிய பலத்தை இந்த படத்தில் நான் காட்டி உள்ளேன். அது தான் மெளனம்.

பெண்களின் மிகப்பெரிய பலம்
ஏன்னா 90 சதவீதம் பெண்கள் மெளனமாக தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் வலிமையானவர்கள். அவர்களின் மெளனம் தான் அவர்களின் மிகப் பெரிய பலம். அது தான் இந்த கேரக்டரின் மிகப் பெரிய அழகு. நான் நடித்ததிலேயே மிக அழகான, அற்புதமான கேரக்டர் இது தான் என தெரிவித்துள்ளார் ஜோதிகா.

ஆச்சரியப்பட வைத்த தகவல்
மாயாவி படத்தில் நடிகர் சத்யன், 100 ரூபாய் கொடுத்தால் 1000 ரூபாய்க்கு நடிப்பியாமே என ஜோதிகாவை கிண்டல் செய்திருப்பார். அப்படிப்பட்ட ஜோதிகாவே மாமியாரிடம் இருந்தும், உறவுக்கார பெண்களிடம் இருந்தும் தான் தனது கேரக்டருக்காக நிறைய கற்றுக் கொண்டேன் என சொல்லி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இரண்டாவது வெளியீடு
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம், அமேசான் பிரைம் வீடியோவுடன் கையெழுத்திட்ட நான்கு பட ரிலீஸ் ஒப்பந்தத்தில் இரண்டாவதாக வெளியாகி உள்ள படம் உடன்பிறப்பே. ஏற்கனவே செப்டம்பர் மாதம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் அமேசானில் ரிலீஸ் செய்யப்பட்டது. நவம்பரில் ஜெய் பீம் படமும், டிசம்பரில் ஓ மை டாக் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











