ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுடன் இமயமலையின் அழகு...வைரலாகும் ஜோதிகாவின் வீடியோ
சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஜோதிகா, தமிழில் அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்தில் மிக சிறிய ரோலில் நடித்திருந்தாலும், அடுத்த படத்திலேயே விஜய்யுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்து மிகப் பெரிய ஹிட் கொடுத்து, டாப் நடிகையாகி விட்டார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன், சிம்பு என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் ஜோதிகா. சூர்யாவுடன் பல படங்களில் ஒன்றாக நடித்து, அவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

ஜோதிகாவின் உடன்பிறப்பே
2009 ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா, கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ல் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தனது கணவர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி நடிக்கும் உடன்பிறப்பே படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இமயமலையில் டிரக்கிங்
இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகா இமயமலைக்கு நண்பர்கள் சிலருடன் டிரக்கிங் சென்றுள்ளார். ஆகஸ்ட் 31 ம் தேதி இன்ஸ்டாகிராமிலும் இணைந்தார். தனது முதல் பதிவாக கணவர் அல்லது குடும்பத்துடன் ஃபோட்டோவை பதிவிடுவார். அல்லது தனது புதிய படத்தின் ஸ்டில்கள் ஏதாவது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோதிகா, இமயமலையில் கையில் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்த ஃபோட்டோவை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த உடனே அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி விட்டது. சூர்யாவும் ஜோதிகாவை இன்ஸ்டாகிராமிற்கு வரவேற்று, என் பொண்டாட்டி ரொம்ப ஸ்டிராங் என கருத்து பதிவிட்டிருந்தார்.
Recommended Video

வைரலாகும் பதிவுகள்
ஜோதிகா பதிவிட்ட முதல் பதிவே 7 லட்சம் லைக்குகளை பெற்று வைரலானது. இந்நிலையில் இரண்டாவது பதிவாக இமயமலையில் டிரக்கிங் சென்றது, அங்கு அவர் பார்த்த இடங்கள், அவற்றின் அழகு ஆகியவற்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார் ஜோதிகா. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

வெள்ளை பூக்கள் மலரட்டுமே
கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக வைரமுத்துவின் அழகிய வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலை இணைத்து இந்த வீடியோவை ஜோதிகா பகிர்ந்துள்ளதால், இது அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழ போரின் போது அங்கு வாழ்ந்த மக்களின் மனநிலையை காட்டிவதாகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் இந்த பாடலை வைரமுத்து எழுதி இருப்பார். வெள்ளை பூக்கள் உலகம் எங்கு மலர்கவே என துவங்கும் இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்து, பாடி இருப்பார்.
குவியும் பாராட்டுக்கள்
உலக அமைதியை வலியுறுத்தும், மனதிற்கு இதமான இந்த பாடலுடன் ஜோதிகா பகிர்ந்த இமயமலையின் அழகை ரசிக்கும் போது, பார்ப்பவர்களே இமயமலைக்கு சென்ற உணர்வு வருகிறது. ஜோதிகாவையும், இந்த வீடியோவையும் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











