வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது
திருவனந்தபுரம்: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்து மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நடிகை சந்தியாவின் திருமணம் ஒருவழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் நடிகை சந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் சந்தியாவுக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்தது. சந்தியா சென்னையில் உள்ள வீட்டில் சிக்கிக் கொண்டார். வெள்ளத்தால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை.
சந்தியாவின் குடும்பத்தாரால் மாப்பிள்ளை வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தான் அவர்களின் செல்போன் வேலை செய்து மாப்பிள்ளை வீ்ட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை கேரளாவில் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதயடுத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சந்தியா, வெங்கட் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நிலைமை சரியான பிறகு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











