மனசாட்சியே இல்லையா? ஹிட் அண்ட் ரன் வழக்கில் சிக்கிய நடிகை.. அப்பாவி பெண் மீது காரை ஏற்றி விபத்து!
பெங்களூரூ: கன்னடத் திரையுலகில் 'அரபு சுந்தரி’, 'ரவுடி பேபி’, 'ஹிரண்யா’ போன்ற படங்களில் நடித்த திவ்யா சுரேஷ், பிக் பாஸ் கன்னடத்தின் 8வது சீசனின் போட்டியாளராகவும் இருந்தார். தற்போது அவர் மீது ஹிட் அண்ட் ரன் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இரவு, தனது உறவினர் அனுஷாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், கிரண் என்பவர் மற்றொரு உறவினரான அனிதாவுடன் நள்ளிரவு 1:45 மணியளவில் பைக்கில் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.
பேட்டராயனபுரா எம்.எம். ரோடு அருகே நாய்கள் குரைத்ததால், கிரண் தனது பைக்கை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த திவ்யா சுரேஷ், கிரணின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இந்த விபத்தில் பைக்கில் இருந்த மூவரும் கீழே விழுந்தனர். அனுஷா மற்றும் கிரணுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அனிதாவின் கால் முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய திவ்யா சுரேஷ், அனிதாவின் கதறல் கேட்டும் காரை நிறுத்தாமல் சென்றது மனிதநேயமற்ற செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்திற்குப் பிறகு அனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் ₹2 லட்சம் செலவாகியுள்ளதாக கிரண் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
விபத்து: அக்டோபர் 7ஆம் தேதி, கிரண் பேட்டராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் எண்ணைக் கண்டறிந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியது திவ்யா சுரேஷ் என்பது அப்போது தெரியவந்தது. போலீசார் திவ்யா சுரேஷின் காரைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாலும், பின்னர் திவ்யா காரை மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வருத்தம்: விபத்து நடந்து இத்தனை நாட்களாகியும் திவ்யா சுரேஷ் தங்களை விசாரிக்கக்கூட வரவில்லை என்று கிரண் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மைசூரில் இருந்து பெங்களூரு வந்து கஷ்டப்பட்டு வாழும் தாங்கள், அனிதா தையல் வேலை செய்து குடும்பத்துக்கு உதவியதாகவும், இப்போது அவரது முழங்கால் எலும்பு முறிந்துள்ளதால், ஒரு வருடம் நடக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை ₹2 லட்சம் செலவான நிலையில், தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி கிரண் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடம்: வாகனம் ஓட்டுவது என்பது மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டிய ஒன்று. சிறிய தவறு கூட பெரும் ஆபத்துக்கு வழிவகுத்துவிடும். உங்கள் தவறு அல்லது எதிரில் வருபவர்களின் தவறு, எதுவாக இருந்தாலும் விபத்தைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், சிலர் அலட்சியமாக வாகனம் ஓட்டி, தங்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்திக்கொள்வதுடன், மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர். கன்னட தொலைக்காட்சி நடிகை திவ்யா சுரேஷின் விவகாரம் இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம்.


Click it and Unblock the Notifications











