பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி
சென்னை: நடிக்க வாய்ப்பு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறிய டீனேஜ் பெண்ணை பிரபல ஹீரோ ஒருவர் திட்டி அனுப்பியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் படுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகிலும் சில பிரபங்களுடன் தான் படுக்கையை பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

பெயர்கள்
இன்றுதான் நான் #SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.

குற்றம்
#SriReddyயின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான் -
லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்.
கொடுப்பதே லஞ்சம், இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது .... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும், ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து, பிறகு அடுத்த ஊரிலும் அதே தவற்றையே மறுபடி மறுபடி செய்வதற்கு பெயர் என்ன?

தவறு
குறுக்குவழி ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? அப்படியென்றால், சினிமாவுக்கு தேவையான தகுதியோ திறமையோ அதிர்ஷ்டமோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்த பெண் யோசித்ததாகவே தெரிகிறது. தகுதிக்கு மேல் பேராசைப்பட, சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும்.... எல்லோருக்கும் அது கைகூடாது. திருடி தின்பது சுலபமென்றால் எல்லோரும் திருடர்களாத்தான் இருப்பார்கள். நேர்வழிதான் கடைசியில் நிலைக்கும் என்பதை பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நம் முன்னோர்கள் நமக்கு அதை சொல்லித்தந்து போயிருக்கிறார்கள். அந்த ஒழுக்கத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம், ஆனால் என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும்.

பெண்கள்
ஸ்ரீ ரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களை தவறாக எடைபோட்டு ஏமாந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அவர்,தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான் . எல்லா நடிகைகளும் படுத்துதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார். சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

முட்டாள்தனம்
படுத்தால் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிக பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னை போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு ! சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன். நான் ஒரு பெரிய நடிகருடன் கதாநாயகியாக நடித்தபடம். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு ; ஜனத்திரள் மிகுந்த காட்சி. அங்கே, ஒரு டீனேஜ் பெண், ஸ்டைலான நாகரிகமான அழகிய பெண், நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கிறது. வேறு பக்கம் அமர்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு தெளிவாக கேட்டது.
பெண்: "சார் நான் உங்க பெரிய fan. உங்களோட தனியா பேச முடியுமா"
நடிகர்: தனியாவா? இங்கேயே சொல்லுமா ! "
பெண்: "உங்க கூட நடிக்கணும் சார் ! அதுக்கு நான் என்ன வேணா பண்ண தயாரா இருக்கேன் சார்! I am ready for anything"
நடிகருக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது. எனினும் குரலை உயர்த்தாமல் மிக கடுமையான தொனியில் சொன்னார் -
"பைத்தியமா உனக்கு? படிக்கிற பொண்ணு பேசுற பேச்சா இது? என்னை என்னானு நினைச்சு பேசுறே? என்கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் போய் பேசிடாத. Idiot. உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா உன் சினிமா ஆசை? You are a child. You are not fit for cinema. மொதல்ல ஊரு போய் சேரு. படிக்கிற வேலைய பாரு. Dont ever think like this again. "
இன்றும் எனக்கு அந்த ஹீரோவின் சொற்கள் நன்றாக நினைவுள்ளது. இத்தனைக்கும் அந்த ஹீரோ ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியெல்லாம் இல்லை. தொடர்ச்சியாக extramarital affairs இல் மாட்டியவர் தான். But யாரையும் ஏமாற்றுமளவுக்கு cheap character இல்லை.
எதற்கு சொல்கிறேன் என்றால், சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப்பேர்வழிகள் இல்லை. இன்னும் சொல்ல போனால், weak characters கூட எல்லோரிடமும் வம்புக்கு போக மாட்டார்கள்.
நடவடிக்கை
ஸ்ரீரெட்டி போன்ற எந்த பின்புலமும் இல்லாத , தனிமனிஷியை கண்டிப்பாக துன்புறுத்துவார்கள். They most likely go after soft targets. நான்கு காளைகள் கதை போலத்தான். ஒற்றுமையாக இருக்கும் வரை சிங்கமும் ஓநாயும் ஒன்னும் செய்யமுடியாது. பிரித்தாளும் சூழ்ச்சியாலேதான் காளைகள் வெல்லப்பட்டன. கொல்லப்பட்டன. இது போன்ற பாலியல் பிரசினைகளில் ஒரு மாற்றம் வேண்டுமானால் சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர, அவர்கள் உரிமைகளுக்கு போராட, அநீதியை எதிர்த்து கேட்க, மற்ற பெண்களுக்கு தோள் குடுக்க ஒரு அமைப்பு அவசியம். அந்த அமைப்பில் ஒழுக்கமும் ஒற்றுமையும் அவசியம். இங்கு நான் ஒழுக்கம் என்று சொல்வது வாழ்க்கைமுறை தேர்வுகளை இல்லை. கொள்கை சார்ந்த முடிவுகளை. அமைப்பு சார்ந்த கட்டுப்பாட்டை.


Click it and Unblock the Notifications











