கருணாநிதியிடம் ஆசி பெற்ற கீர்த்தி

30 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி எழுதிய நூல் சாரப்பள்ளம் சாமுண்டி. இந்த நாவல் தற்போது திரை வடிவம் பெறுகிறது.
உளியின் ஓசை என்ற பெயரில் திரைப்படமாகும் இப்படத்தில், வினீத் சிற்பியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும், அக்சயாவும் நடிக்கின்றனர். சரத் பாபு ராஜராஜ சோழ மன்னனாக நடிக்கிறார். கவிஞர் இளவேனில் படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. 15 நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை முதல்வரிடம் போட்டுக் காட்டினர். காட்சிகளைப் பார்த்த முதல்வர் நன்றாக வந்திருப்பதாக பாராட்டினார்.
இந்த படத்தின் நாயகியான கீர்த்தி சாவ்லா தனது 21வது பிறந்த நாளையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்று அழரை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
அப்போது உளியின் ஓசை படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக கருணாநிதி, கீர்த்தியைப் பாராட்டினாராம்.
கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டும் என்று விரும்பிய கீர்த்தி அதுகுறித்து முதல்வரின் செயலகத்தை அணுகியபோது உடனடியாக அனுமதி கிடைத்ததாம்.
இதுகுறித்து கீர்த்தி சாவ்லா கூறுகையில், முதல்வரை சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும். ஆனால் உடனடியாக அதற்கான வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகப் பெரிய கெளரவம். இந்தப் படம் எனது திரையுலக வாழ்க்கையில் பெரிய மைல் கல்லாக அமையும். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











