மகள்களுக்காக கணவரை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற நடிகை ரம்பா
சென்னை: கணவரை பிரிந்து வாழும் நடிகை ரம்பா தனது 2 மகள்களின் சட்டப்படியான பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
நடிகை ரம்பா கனடாவில் வசிக்கும் தொழில் அதிபரான இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் கனடாவில் செட்டில் ஆனார்.
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரிவு
ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ரம்பா குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

நீதிமன்றம்
சென்னைக்கு வந்த ரம்பா தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மனு
ரம்பா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நான் தற்போது என் கணவருடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் என்னுடன் உள்ளனர். சென்னையில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

ரம்பா
வழக்கு விசாரணையின்போது ரம்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ரம்பாவுக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளதால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











