கோ 2... இந்தத் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும்!- சொல்கிறார் நிக்கி கல்ராணி
கோ 2 திரைப்படம் இந்தத் தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் நிக்கி கல்ராணி.
தன்னுடைய முதல் படமான 'டார்லிங்' படத்தில் பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிக்கி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் கோ 2 திரைப்படம் மூலம் பத்திரிக்கையாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த அனைவரும் இவரின் அழகையும் நடிப்பையும் பாராட்டிய வண்ணம் உள்ளார்களாம்.
ஆர்எஸ் இன்போடைன்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்து, சரத் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
தேர்தல் களத்தில் பிஸியாக உள்ள தமிழகத்தில் மே 13 ஆம் தேதி வெளியாகும் கோ 2 திரைப்படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார் நிக்கி.
"தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசியலையும், ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். ஒரு படத்தில் நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது. அப்படி புதுபுது வேடங்களையும், பலபல கதாப்பாத்திரங்களையும் நான் தேடி சென்ற போது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தான் கோ 2.
இந்த படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாப்பாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவ்வளவு ஏன், அவர்கள் எப்படி தங்களின் மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல் கொண்டு அனைத்தையும் கற்றுக் கொண்டேன். என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகிறேன்.
அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது ,உழைப்பும் திறமையும் மிக மிக முக்கியம். மே 13 ஆம் தேதி படம் வெளிவரும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்கிறார் நிக்கி கல்ராணி.


Click it and Unblock the Notifications











