என் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் .. குஷ்பு குமுறல்

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து குஷ்புவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது கேலிக் கூத்தாக உள்ளது. குறிப்பிட்ட சிலர் என்னையே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளனர். எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்க முயலுகிறார்கள்.
இந்து கடவுள்களை நான் அவமதித்து விட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது சில வேலையில்லாதவர்களின் வேலையாகும்.
உண்மையில், நான் சம்பவ நாளன்று சிலைகளுக்கு 4 அல்லது 5 அடி தொலைவில்தான் அமர்ந்திருந்தேன்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை சந்திக்க நான் தயார்.
இந்துக்களின் உணர்வுகளை நான் ஒருபோதும் புண்படுத்தியுள்ளது. இந்துக் கடவுள்களையும் நான் அவமதிக்கவில்லை. உண்மையில் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்து மத சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றி வருகிறேன். இந்துப் பெண்ணாகத்தான் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்து மதத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார் குஷ்பு.
இதற்கிடையே, குஷ்புவின் வீட்டுக்கு ஏராளமான பத்திரிக்கையாளர்களும், டிவி நிருபர்களும் சென்று கருத்து கேட்க முயன்றனர். ஆனால் குஷ்பு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் திரும்பி விட்டனர்.


Click it and Unblock the Notifications











