கண்ணா நீ எனக்குத்தாண்டா!

ரொம்ப நாட்களாக எடுக்கப்பட்டு வரும் படம் கண்ணா நீ எனக்குத்தாண்டா. உதய் என்ற புதுமுக ஹீரோவுடன் உருவாகி வரும் இப்படத்தை ஒளிமாறன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார்.
ஒளிமாறன் ஒரு நடிகர், அதாவது துண்டு துக்கடா வேடங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தார். அதிர்ஷ்டக் காத்து அவரது மேல் லேசாக பட இப்போது இயக்குநராகி விட்டார்.
முதல் படத்தையே கிளாமர் பேசில் கலக்கலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒளிமாறன்.
படத்தின் நாயகன் உதய்யை விடவும் அதிகமாக கவர்வது நாயகிகள்தான். மொத்தம் மூன்று நாயகிகள் இப்படத்தில் ஒருவர் மதிஷா. இன்னொருவர் கவர்ச்சிப் புயல் பாயல், மூன்றாமவர் லக்ஷா.
மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல கவர்ச்சியில் விளையாடியிருக்கிறார்களாம். இதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுகிறார் ஒளிமாறன்.
படத்தோட கதை என்ன என்று கேட்டபோது, காதலிக்கிறாங்க, சாகிறாங்க என்று கூறி நம்மை அதிர வைத்தார். அப்பட திகில் படமா என்று பயந்து போய் கேட்டபோது, கிட்டத்தட்ட அப்படித்தான். நாயகனை மூன்று நாயகிகளும் காதலிக்கிறார்கள். இதில் 2 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.
அவர்களை நாயகன்தான் கொலை செய்தான் என்று பழி வந்து சேருகிறது. அதிலிருந்து அவனை உயிரோடு உள்ள 3வது நாயகி எப்படி மீட்டு கைப்பிடிக்கிறார் என்பதுதான் கதையே என்றார் ஒளிமாறன்.
படம் ஓடிரும்ல என்று நாம் இழுத்தபோது, மூன்று நாயகிகள், ஆளுக்கு 2 பாட்டு என்று மொத்தம் 6 பாட்டு. ஆறுமே கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட படமாக்கியிருக்கிறோம். பிறகு எப்படி ஓடாமல் இருக்கும் என்று நம்மிடமே கேள்வியைத் திருப்பிப் போட்டு விட்டு அடுத்த காட்சிக்கு கிளம்பினார் ஒளி.
எப்படியோ 'ஒளிக்கு' வழி பிறந்தால் சரி!


Click it and Unblock the Notifications











