'தமிழில் விட்டதைப் பிடிப்பேன்' - மீண்டுவரத் துடிக்கும் லட்சுமி மேனன்!
திருவனந்தபுரம் : நடிகை லட்சுமி மேனன் தமிழில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கும்கி', 'குட்டிப்புலி', 'பாண்டிய நாடு' எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவந்தார். சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.
'லட்சுமி மேனன் நடித்தாலே, படம் ஹிட்' எனக் கூறப்பட்ட காலமெல்லாம் உண்டு. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில், 'ஒரே மாதிரியான, கிராமப்புற சப்ஜெக் கொண்ட படங்களில் நடிப்பது அலுப்பு தட்டுகிறது' என்று விலகி இருந்தார்.

இனி படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதற்குப் பின் மனம் மாறி, மீண்டும் நடிக்க வந்தாலும் ஏற்கனவே இருந்தது போல் அவருக்குப் போதிய வரவேற்பு இல்லை.
அவர் நடித்த 'மிருதன்', 'றெக்க' படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை அதில் அவரது நடிப்பும் அவ்வளவாகப் பேசப்படவில்லை. வாய்ப்பின்றி வீட்டில் முடங்கிக் கிடந்த லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவா ஜோடியாக 'யங் மங் சங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் எனத் திட்டவட்டமாகக் கூறி வருகிறாராம் லட்சுமி மேனன். புதிய நடிகைகளைத் தொடர்ந்து வரவேற்றுக் கொன்டிருக்கும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் லட்சுமி மேனனைக் கொண்டாடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











