வரிச் சலுகையை மக்களிடமிருந்து பறிப்பது நியாயமல்ல! - லட்சுமி ராமகிருஷ்ணன்
கேளிக்கை வரி விலக்கு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் கேளிக்கை வரியை வசூலித்து அவர்களுக்கு சுமை ஏற்படுத்துவதைத் தடுக்க ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அதாவது, அரசு அளிக்கும் கேளிக்கை வரி விலக்கின் பலன் முழுவதும் மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாரம்.
இதுதொடர்பாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்:
தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதற்காக வரிவிலக்கின் நோக்கத்தை முற்றிலும் தவறாக அர்த்தம் கொண்டுவிட்டார்கள். அதிகச் சம்பளம் மற்றும் திருட்டு டிவிடி காரணமாக தயாரிப்பாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். திரைத்துறையில் நீடிப்பதே கடினமாகிவிட்டது. இதுபோன்ற விஷயங்களில்தான் தவறுகள் திருத்தப்படவேண்டும்.
தயாரிப்பாளர் அகோரம் சொன்னது போல, கதாநாயகர்கள் தயாரிப்பாளரை அவதிக்கு ஆளாக்காமல், போலியான மிகைப்படுத்தலில் இருந்து இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்வதே, இதற்கு ஒரு தீர்வாக அமையும்.
முன்பு சூப்பர் ஸ்டார்கள் நியாயமான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது திரையுலகம் நன்றாக இருந்தது. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சுயலாபத்துக்காக போலியான மிகைப்படுத்துதலை உருவாக்கின. இதனால் திரையுலகம் அவதிக்குள்ளானது. நிலையில்லாமல் போனது.
வரிச் சலுகையை மக்களிடமிருந்து பறிப்பது நியாயமல்ல. ஏற்கெனவே ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது என்பது நடுத்தரக் குடும்பத்துக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது. இதனால் திருட்டு டிவிடிக்கள் பெருகிவிட்டன. எண்ணிப் பாருங்கள், ஒரு படம் பார்க்க 4 பேர் உள்ள குடும்பத்துக்கு ரூ. 480 ரூபாய்க்குப் பதிலாக ரூ. 340 மட்டும் செலவு ஆனால் எப்படி இருக்கும்!
திகில், அடல்ட், வன்முறை சார்ந்த படங்களை உருவாக்குவது நம் உரிமை. ஆனால் வரிவிலக்கு சலுகையால் அதிக பெண்கள், குழந்தைகளைத் திரையரங்குக்குக் கொண்டு வரமுடியும்.
நீதிமன்ற உத்தரவு, ஊழல் ஏதேனும் இருந்தால் அதை நீக்கும். ஒரு படம் 100 கோடி வசூலித்தால் வரிச்சலுகையால் 30 கோடி கிடைக்கும். சில லட்சங்கள் கேட்கப்படும்போது ஏன் தரமாட்டார்கள்?," என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











