அமெரிக்காவுல மட்டுமில்ல.. நம்ம ஊரிலும் இனவெறி இருக்கு.. மாளவிகா மோகனனின் ஃபிளாஷ்பேக் ஸ்டோரி!
சென்னை: அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாய்டு இனவெறி காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ள நிலையில், இனவெறி இங்கும் இருக்கிறது என நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளும், இந்திய நடிகையுமான மாளவிகா மோகனன் இனவெறிக்கு எதிரான பதிவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.

காலங்காலமாக
அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் காலங்காலமாக நிறத்தால், நிலத்தால், பிறப்பால் இனவெறி பார்க்கப்பட்டே வருகிறது. கல்வி அறிவு பெருகிய காலத்திலும் ஆழ் மனதில் விஷச்செடியாய் வேரூன்றிய இனவெறி இன்னமும் அழியாமல் இருப்பதை ஜார்ஜ் ஃப்ளாய்டு உள்ளிட்டோரின் படுகொலை உணர்த்தி வருகிறது.

கோபக் கனல்
வெள்ளை நிற போலீஸ்காரர் கருப்பின மனிதரை தனது முட்டிக்காலால் கழுத்தை 7 நிமிடங்கள் நெரிக்கும் போது, மூச்சு விட முடியவில்லை, விட்டு விடுங்கள் என்று கெஞ்சிய படியே மூச்சை விட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடூர கொலை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரலான நிலையில் அதை பார்த்த பல பிரபலங்களும் கோபக் கனலை கக்கி தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். வீடியோ ஆதாரம் இல்லாமல் எத்தனையோ ஜார்ஜ் ஃப்ளாய்டுகள் இறந்திருப்பது அமெரிக்காவுக்கு மட்டுமே தெரிந்த கருப்பு சரித்திரம்.

நிறவெறி இங்கேயும் இருக்கு
ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு இந்திய பிரபலங்களான கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, பா. ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது மாளவிகா மோகனன், நிறவெறிக்கு எதிரான ஒரு போஸ்ட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் மட்டுமின்றி இங்கே நம்மை சுற்றியும் நிறவெறி, இனவெறி இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

காலா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வட இந்தியர்கள் தங்களை வெள்ளையர்களாகவும், தென்னிந்தியர்களை கருப்பர்களாகவும் பார்க்கும் வழக்கம் இங்கும் இருக்கிறது. கருப்பு நிறத்தவர்களை ‘காலா' என்றும் அழைக்கிறார்கள் என்றார்.

டீ குடித்தால் கருப்பாகிடுவேன்
மேலும், தனது 14ம் வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார் நம்ம மாஸ்டர் நாயகி. மாளவிகா மோகனின் நெருங்கிய நண்பர், எப்போதும் டீ குடிக்க மாட்டான் என்றும், டீ குடித்தால் கருப்பாகிடுவேன் என அவனது அம்மா சின்ன வயசுல இருந்து அவனுக்கு சொல்லிய குட்டி ஸ்டோரியையும் கூறியுள்ளார்.

கருப்பும் கலர் தான்
தென்னிந்தியர்கள் அனைவரும் கருப்பர்கள் என்ற எண்ணம் அவனை போல அனைத்து வட மாநிலத்தவருக்கும் இயல்பாகவே இருப்பதாகவும், ஆப்பிரிக்காவில் இருப்பவர்களை நிறத்தை வைத்து நீக்ரோ என அழைக்கும் பழக்கம் நம்மிடையே இருப்பதாகவும், கூறியுள்ள மாளவிகா மோகனன், கருப்புன்னா அசிங்கம் கிடையாது. அதுவும் ஒரு அழகான கலர் தான் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











