மலையாள நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டு 17 வயது ரசிகர் கொடுத்த டார்ச்சர்.. என்னடா இப்படி கிளம்பிட்டீங்க!
கொச்சி: சமூக வலைத்தளங்கள் இன்று மனிதர்களின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை வழிகாட்டுவதுடன், தவறான பாதையிலும் அழைத்துச் செல்லலாம். நல்லவர்கள், கெட்டவர்கள் எனப் பலரும் உலவும் இந்தப் பரந்த டிஜிட்டல் உலகில், சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள இது ஒரு தளமாக மாறியுள்ளது.
ஆனால், இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, திரைப்படத் துறையில் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தொந்தரவு கொடுப்பது சிலரின் வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற செயல்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் 'அபிமானம்' என்ற பெயரில் பல நடிகைகளின் நிம்மதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.
இந்த சமீபத்திய நிகழ்வுகளில் ஒரு உதாரணம் தான் நடிகை அவந்திகா மோகனுக்கு நேர்ந்த அனுபவம். மலையாளத் திரையுலகில் பிரபலமான இவர், "யக்ஷி - ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ்", "நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி", "மிஸ்டர் பீன்", "க்ரோகோடைல் லவ் ஸ்டோரி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.கன்னடத்தில் "ப்ரீத்தியல்லி சஹஜா" மற்றும் "கரா" படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் "ஆத்மசகி", "ப்ரியப்பட்டவல்", "ராஜாராணி", "சிவகாமினி" போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து மலையாள ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.

தொல்லை: இப்படிப் புகழ்பெற்ற அவந்திகா மோகனை, கடந்த ஒரு வருடமாக 17 வயது இளைஞர் ஒருவர் விடாமல் துரத்தி வருகிறார். 'ஓம்' திரைப்பட பாணியில், "ஐ லவ் யூ... யூ மஸ்ட் லவ் மீ" என்று குறுஞ்செய்தி அனுப்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார். தினமும் தவறாமல் அனுப்பப்படும் இந்தச் செய்திகளால் பொறுமையிழந்த அவந்திகா, இறுதியாக அந்த இளைஞருக்குப் பதிலளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "கடந்த ஒரு வருடமாகத் திருமணம் செய்துகொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பும் எனது ரசிகருக்கு இது ஒரு செய்தி" என்று அவர் தொடங்கினார்.
ரசிகர் தொல்லைக்கு பதில்: மேலும், "உனக்கு 16 அல்லது 17 வயது இருக்கலாம். வாழ்க்கை என்றால் என்னவென்று உனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஒரு வருடமாக என்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாலும், நீ இன்னும் குழந்தைதான். திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக உன் தேர்வுகளில் கவனம் செலுத்து" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். "நீ என்னை விட மிகவும் இளையவன். ஒருவேளை நாம் திருமணம் செய்தால், எல்லோரும் என்னை உன் மனைவி என்று நினைக்க மாட்டார்கள், மாறாக நான் உன் தாய் என்று நினைப்பார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், "இப்போதைக்கு உன் படிப்பில் கவனம் செலுத்து, சரியான நேரம் வரும்போது உன் காதல் கதை தொடங்கும்" என்றும் அறிவுரை கூறினார்.
ஏற்கனவே திருமணம்: அவந்திகாவின் இந்தப் பதிவு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதேசமயம், 17 வயது இளைஞரின் இச்செயல் சிலரை கோபமடையச் செய்துள்ளது. சிலர் என்னடா இப்படி இளம்பிட்டிங்க என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவந்திகா மோகன் 2017 இல் அனில் குமார் என்பவரை மணந்தார். அவர்களுக்கு ருத்ராம்ஷ் என்ற மகனும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











