அரசியலில் மனீஷா தொபுக்கடீர்!
இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய, நேபாள மண்ணின் மகளான மனீஷா கொய்ராலா அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
நேபாள நாட்டு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் மனீஷா கொய்ராலா. இவரது தாத்தாதான் நேபாளத்தின் முதல் பிரதமராக இருந்தவர். உறவினரான கிரிஜா பிரசாத் கொய்ராலா இப்போது பிரதமராக இருக்கிறார். மனீஷாவின் தந்தை அமைச்சராக இருந்தவர்.இந்தியில் முன்னணி நாயகியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் மனீஷா. தமிழிலும் தலை காட்டியுள்ளார். பம்பாய், முதல்வன், பாபா, ஆளவந்தான், இந்தியன் என சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட ரிடையர்ட் ஆகி விட்ட மனீஷாவுக்கு அரசியலில் ஆர்வம் புகுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தாத்தா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் நாங்கள் மக்கள் சேவையை புனிதமாக கருதுகிறோம்.
சினிமாவில் என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு திறமையாக நடித்திருக்கிறேன். இனி என் அடுத்து கவனம் அரசியலில் தான். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற அரசியலில் குதிக்கப் போகிறேன்.
இதற்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு தருவதால் எளிதில் வெற்றி பெறுவேன் என்கிறார் மனீஷா.
எந்த ஊர் அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்பதை மனீஷா கூறவில்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த ஊர் அரசியல் மனீஷாவில் கிளாமர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











