செந்திலை மறுத்த மீனா

கவுண்டமணியுடன் சேர்ந்தும், தனித்தும், பல காமெடியன்களுடன் இணைந்தும் கலகலக்க வைத்த செந்தில், முதல் முறையாக நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
ஆதிவாசியும், அதிசய பேசியும் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். ஆதிவாசியின் கையில் செல்போன் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர் எப்படியெல்லாம் அல்லாடுகிறார் என்பதுதான் கதை.
பாபு தயாரிக்கும் இப்படத்தில் செந்திலுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவரை போட தீர்மானித்து முதலில் மீனாவை அணுகினர். ஆனால் அவரோ சொன்னவுடனேயே முடியாது என்று மறுத்து விட்டாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல்ஹாசன் முதல் இளைய தலைமுறை சூப்பர் ஸ்டார்களான அஜீத், விஜய் என பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ள நான் செந்திலுக்கு ஜோடியாக நடித்தால் சரியாக இருக்காது என்று கூறி விட்டாராம் மீனா.
இதனால் சுணங்கிப் போன ஆதிவாசி குழுவினர், அடுத்ததாக நமீதாவை 'அட்டாக்' செய்தனர். அவரும் கதையைக் கேட்டு வைத்துள்ளாராம். பின்னர் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு விட்டு கடிதம் மூலம் தெரிவிக்கிறோம் என்று கிளம்பிப் போகும் மாப்பிள்ளை வீட்டார் போல, பிறகு சொல்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.
ஒரு வேளை அவரும் மறுத்தால் வடிவேலுவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஆடிய ஷ்ரியாவை கேட்பது என்ற தீர்மானத்தில் உள்ளாராம் தயாரிப்பாளர் பாபு.
பேசாமல், கோவை சரளாவை ஹீரோயினாக போட்டு விடலாமே!


Click it and Unblock the Notifications











