மினிஷா லம்பாவுக்கு ரூ 4.5 லட்சம் அபராதம்!
இந்தி நடிகையும் மாடல் அழகியுமான மினிஷா லம்பா கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச படவிழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பிரபல நகை தயாரிப்பு நிறுவனத்தின் நகைகளை அணிந்து கொண்டு மாடலாக வந்தார். விழா முடிந்ததும் அந்த நகைகளுடன் இந்தியா திரும்பினார்.
அதன் மதிப்பு ரூ.31.32 லட்சம். அதற்கு அவர் சுங்க வரி செலுத்தவில்லை. மும்பை விமான நிலையத்தில் நடிகை மினிஷா லம்பாவிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் நகைகளுக்கு சுங்கவரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர விலை உயர்ந்த பைகள், செருப்புகள், கண்ணாடிகள் உள்பட பொருட்களும் எடுத்து வந்தார்.
இவை அனைத்தும் வரி செலுத்தும் இனங்கள் என்று அதிகாரிகள் அவரிடம் எடுத்துக் கூறினர். இந்த நகைகளை எடுத்து வருவது பற்றிய ரசீது குறிப்புகளும் அவரிடம் இல்லை. இதையடுத்து நடிகை மினிஷா லம்பா இந்த நகைகள் பொருள்களை கடத்தி வந்ததாக கருதப்பட்டு அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.
மினிஷா கூறுகையில், பட விழாவில் காட்சிக்காக அணிந்த நகைகளைத்தான் எடுத்து வந்தேன். நகை விவரங்கள் அடங்கிய கடிதத்தை பிரான்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தபோது தவற விட்டு விட்டேன், என்றார். அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முடிவில் நடிகை மினிஷா எடுத்து வந்த நகைகளுக்கு அபராதமாக ரூ.3 லட்சம், அவற்றுக்கான சுங்கவரி கட்டணமாக ரூ.95 ஆயிரம், மற்ற பொருள்களுக்கான சுங்கவரி ரூ.10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று சுங்க இலாகா ஆணையர் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications












