பாவனைவைப் போல மேலும் ஒரு நடிகை காரில் கடத்தல்... பணம் கேட்டு மிரட்டல்!
மும்பை: நடிகை பாவனா கடத்தப்பட்டது போல, இந்தி நடிகை ஒருவரை காரில் கடத்தி பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
கடைசி நேரத்தில் அந்த நடிகை காரில் இருந்து குதித்து தப்பி ஓடியதால் காப்பாற்றப்பட்டார்.

நடிகை பாவனாவை சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்ததும், அதை செல்போனில் படம்பிடித்து பணம் பறிக்க முயற்சி செய்ததும் பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கும்பலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்துள்ளது.
இந்தி நடிகை அர்ச்சனா கௌதம் (வயது 22) மும்பையில் உள்ள கோரேகான் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ளார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது 'பேஸ்புக்' நண்பர் அனிருத். இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே நட்பாக பழகினார்கள்.
சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவை அனிருத் தொடர்பு கொண்டு ஜவுளிக்கடை விளம்பர படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதற்காக ரூ.50 ஆயிரம் முன்பணம் தருவார்கள். அந்த பணத்தை நேரில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அர்ச்சனா அதை உண்மை என்று நம்பி அனிருத் சொன்ன இடத்துக்குச் சென்றார். அங்கு 4 பேர் இருந்தார்கள். அவர்கள் அர்ச்சனாவை காரில் ஏற்றி கடத்தினார்கள்.
'நாங்கள் சி.பி.ஐ அதிகாரிகள் உன்மீது விபசார வழக்கு பதிவு செய்து விடுவோம். ரூ.1 லட்சம் தந்தால் விட்டு விடுகிறோம்' என்று மிரட்டினார்களாம். அர்ச்சனா பயந்துபோய் தனது அண்ணனுக்கு போன் செய்து கடத்தல்காரர்களிடம் பணம் கொடுத்து தன்னை மீட்கும்படி அழுதார். கடத்தல் ஆசாமிகள் விமான நிலையம் அருகில் காரை நிறுத்தி பணத்தை அங்கு கொண்டு வந்து தரும்படி அர்ச்சனாவின் அண்ணனிடம் தெரிவித்தனர்.
அப்போது அர்ச்சனா திடீரென்று காரில் இருந்து குதித்து, "என்னை காப்பாற்றுங்கள்" என்று அலறியபடி தப்பி ஓடினார். கடத்தல்காரர்கள் பின்னால் விரட்டிச் சென்றனர்.
அங்கு நின்ற இளைஞர்களும், ஆட்டோ டிரைவர்களும் அர்ச்சனாவை காப்பாற்றினார்கள்.
கடத்தல்காரர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அனிருத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











