"ஏர்வாய்ஸ்" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்!
மும்பை: கஜினி படக்காட்சிகள் போலவே நிஜவாழ்க்கையிலும் தனக்கு காதல் மலர்ந்ததாக நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்த அசின், கஜினி படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டிற்கு போனார். பின்னர் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பத்தலைவி ஆகிவிட்டார்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார் அசின். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கஜினி படக்காட்சிகள்...
கஜினி படத்தில் எனக்கும் மொபைல் நிறுவன அதிபர் சஞ்சய் ராமசாமிக்கும் காதல் மலர்வது போன்று காட்சி வைத்து இருந்தனர். எனது நிஜ வாழ்க்கையிலும் அது நடந்து விட்டது.

ஹாய்...
‘ஹவுஸ்புல்' இந்தி படத்தை விளம்பரப்படுத்த நானும், அக்ஷய்குமாரும் வெளிநாடு புறப்பட்டோம். விமான நிலையத்தில், அப்போதுதான் முதல் தடவையாக ராகுல் சர்மாவை பார்த்தேன். அவரை மொபைல் நிறுவன அதிபர் என்று அக்ஷய்குமார் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

பொருத்தமான ஜோடி...
விமானத்தில் ஏறியதும் அக்ஷய்குமார் என்னிடம், ‘நீயும், ராகுல் சர்மாவும் பொருத்தமான ஜோடிகளாக தெரிகிறீர்கள் என்று என்னிடம் கூறினார். அக்ஷய்குமார் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். எனவே அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சம்மதமா...?
பிறகு ராகுல் சர்மா என்னுடைய போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார். ஒருநாள் திடீரென்று அவர் என் வீட்டுக்கு வந்தார். எனது அம்மா, அப்பாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அதிர்ந்தார்கள். பின்னர் அவர்கள் எங்கள் மகள் விருப்பம்தான் எங்களுக்கும் என்றனர்.

ஆய்வு...
திடீர் என்று அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதால் என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அவகாசம் கேட்டேன். கொஞ்ச நாட்கள் ராகுல் சர்மா எப்படிப்பட்டவர். அவரது குணநலன்கள் பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆய்வு செய்தேன். அப்போது எந்த பின்புலமும் இல்லாமல் சுயமாக உழைத்து இந்த நிலைமைக்கு கஷ்டப்பட்டு உயர்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.

சரியான ஜோடி...
பெரும் பணக்காரராக இருந்தும் எளிமையாகவே பழகினார். அவர் எனக்கு சரியான ஜோடி என்று புரிந்து கொண்டேன். அதன்பிறகு திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். திருமணத்துக்கு பிறகு எனது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











