திருநங்கைகள் குறித்த படத்திற்கு 'ஏ' சான்றிதழா?-திருநங்கை கல்கி ஆவேசம்
திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து விளக்கும் நர்த்தகி படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதற்கு அப்படத்தின் நாயகியாக நடித்துள்ள திருநங்கை கல்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நர்த்தகி என்ற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகியுள்ளது. திருநங்கைகளின் சோக வாழ்க்கை அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை விளக்கும் படம் இது. இப்படத்தின் கதை நாயகியாக திருநங்கை கல்கி நடித்துள்ளார். ஜனவரி 14ம் தேதி இப்படம் திரையிடப்படவுள்ளது.
இந்த நிலையில் படத்திற்கு ஏ சான்றிதழை அளித்துள்ளது சென்சார் போர்டு. அதாவது வயது வந்தோர் மட்டும் பார்கக் கூடிய படம் என்ற சான்றிதழைக் கொடுத்துள்ளனர். இதற்கு கல்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்கி கூறுகையில், இப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்தரித்துள்ளனர். எந்தவிதமான ஆபாசமான காட்சிகளோ அல்லது அறுவெறுப்பான வசனமோ இல்லை. அலங்கோலமான நடனமும் இல்லை.
பெண் இயக்குநரான விஜயபத்மா, தமிழகத்தின் திருநங்கைகள் சந்திக்கும் அவலங்களை மிகவும் உருக்கமாக சித்தரித்துள்ளார். குழந்தைகளும் பார்க்கக் கூடிய வகையில்தான் படத்தின் காட்சிகள் உள்ளன. ஆனாலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழை அளித்துள்ளது வருத்தமும், வேதனையும் தருகிறது.
திருநங்கைகள் குறித்து சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதையே இந்த சான்றிதழ் காட்டுகிறது என்றார் அவர்.
குத்துப் பாட்டு, இடுப்பை பல கோணங்களில் எடுத்துக் காட்டும் வெட்டுப் பாட்டுகள் தாராளமாக இடம் பெற சென்சார் போர்டு அனுமதி தரும். ஜாதியினர் குறித்து தவறாக, கிண்டலாக சித்தரிப்பதை சென்சார் போர்டு அனுமதி தரும். ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டுக் குத்துக்களுடன் கூடிய படங்களை தாராளமாக அனுமதிப்பார்கள். ஆனால் உருப்படியான ஒரு படத்தை எடுத்தால் உடனே ஏ போட்டு விடுவார்கள்.
திருநங்கைகள் திருந்தி விட்டார்கள், முன்னேற்றப் பாதைக்கும் திரும்பி விட்டார்கள். ஆனால் சென்சார் போர்டுக்காரர்கள் எப்போது திருந்தப் போகிறார்களோ...


Click it and Unblock the Notifications











