எனது மகள்களால் பெருமை அடைகிறேன்… ட்விட்டரில் நெகிழ்ந்த குஷ்பு !
சென்னை : சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இந்தியாவில் பெண்களுக்கான சமத்துவமின்மை, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பல தடைகள்
ஆண் குழந்தையோ... பெண் குழந்தையோ பிறப்பதானாலேயே சாதனை படைப்பதில்லை. அவர்களை சரிசமமாக வளர்ப்பதானாலேயே சாதனை படைக்கின்றனர். பெண் குழந்தை பிறந்தால் அச்சப்படுவது, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பது, சமுதாயத்தில் பாலின பாகுபாடு, திருமணத்திற்கு பின் சிறு வட்டத்திற்குள் வாழ சொல்லி நிர்பந்திப்பது என பெண்களுக்கு எதிராக பல தடைகள் இருக்கின்றன.

தேசிய பெண்குழந்தைகள் தினம்
இப்படி சமுதாயத்தில் இன்னும் எத்தனையோ பிரச்சனைகளை பெண் குழந்தைகள் சந்தித்து, பல தடைகளைத்தாண்டி சாதனைப்படைத்து வருகிறார்கள். அந்த பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 24ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெருமை அடைகிறேன்
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுங்கள். எங்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள், எந்த மனிதனையும் விட அறிவு ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் உயர்ந்தவர்கள். உங்கள் பெண் குழந்தையை கொண்டாடுங்கள். திறந்த இதயத்துடன் அவளை வரவேற்கவும். உங்கள் மகனைப் போலவே மகளும் உங்களில் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார்.

பலரும் வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











