3,600 ஜோடிகளின் மெகா திருமணத்தில் எம்எல்ஏவை மணந்த நவநீத் கவுர்!

நடிகை நவ்நீத் கவுர், பஞ்சாப் மாநிலத்தை சொந்த மாநிலமாகக் கொண்டவர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தர்ஷண் என்ற கன்னடப்படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்கள் பலவற்றில் நடித்து பிரபலம் ஆனார்.
தமிழில் இவர் விஜயகாந்துடன் அரசாங்கம், கருணாசுடன் அம்பாசமுத்திரம் அம்பானி, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, பாண்டிராஜின் இயக்கத்தில் வெளிவந்த வம்சம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை நவ்நீத் கவுருக்கும், மராட்டிய மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள பத்னேரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ரானாவுக்கும் காதல் அரும்பியது. இருவரும் பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.
ஆயிரக்கணக்கான ஜோடிகளுடன் மெகா திருமண விழாவாக நடத்தி, அதில் தனது காதலியை கைப்பிடிக்க ரவிரானா முடிவு செய்தார். இதற்காக 3 ஆயிரத்து 610 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பவுத்த மத ஜோடிகள் இதில் அடக்கம்.
மெகா திருமண விழாவை அமராவதியில் உள்ள அறிவியல் மைதானத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரவிரானா-நடிகை நவ்நீத் கவுர் ஜோடி உள்பட 3 ஆயிரத்து 611 ஜோடிகளின் திருமணமும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மெகா மண விழாவில் மராட்டிய முதல்வர் பிரித்விராஜ் சவான், தொழில் துறை மந்திரி நாராயண் ரானே, அமராவதி மாவட்ட பொறுப்பு மந்திரி ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல், யோகா குரு பாபா ராம்தேவ், சகாரா இந்தியா குழும தலைவர் சுப்ரதோ ராய், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பிரபலங்களுடன் பெருந்திரளான பொதுமக்களும் வந்திருந்து அனைத்து தம்பதியரையும் வாழ்த்தினர்.
மணவிழாவில் வாழ்த்திப் பேசிய முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான், இப்படி ஒரு சமூக விழாவாக தனது மணவிழாவை மாற்றிக்காட்டிய எம்.எல்.ஏ. ரவி ரானாவையும் நவநீத் கவுரையும் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











