வருத்தத்தில் நவ்யா
மாயக்கண்ணாடி காலை வாரி விட்டு விட்டதால், நவ்யா நாயர் பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
மலையாளத்தில் விறுவிறுப்பான நாயகியாக நடித்து வந்த நவ்யா நாயர், அழகிய தீயே படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் நன்றாக அமைந்தும், நவ்யா சிறப்பாக நடித்தும் கூட அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை.இருந்தாலும் சோர்ந்து போகாமல் பொறுமை காத்த நவ்யாவுக்கு வாகாக வந்தது சிதம்பரத்தில் அப்பாசாமி. தங்கர்பச்சான் கொடுத்த அருமையான வாய்ப்பால் சிறந்த நடிகையாக தமிழிலும் அறியப்பட்டார் நவ்யா.
இப்படம் பெற்ற வெற்றியால் நவ்யா கவனிக்கப்பட்டார், அடுத்தடுத்து படங்கள் குவியத் தொடங்கின. விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில்தான், சேரன் படத்தில் நடிக்கப் போய் லாக் ஆகிப் போனார் நவ்யா.
முதலில் இருவரும் இணைந்து ஆடும் கூத்து படத்தில் நடித்தனர். இந்தப் படம் முடிந்தும் கூட வெளியே வரும் நாள் எப்போது என்று தெரியாமல் கோலிவுட்டே குழம்பிப் போனது. இந்தப் படம் முடிந்தும், முடியாமலும், அடுத்த படமாக மாயக்கண்ணாடியில் புக் ஆனார் நவ்யா.
இப்படத்திலும் சேரனும், நவ்யாவும் இணைந்து நடித்தனர். படம் வரைமுறையே இல்லாமல் படு தாமதமாக வளர்ந்தது. சேரனுக்கும், நவ்யாவுக்கும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டு விட்டதாக சகட்டுமேனிக்கு செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்தும் கூட அதுகுறித்து இருவரும் கவலைப்படவில்லை.
ஒரு வழியாக படம் ரிலீஸாகி பஞ்சு அருணாச்சலத்தை பெரும் கடனாளாக்கி விட்டுத்தான் ஓய்ந்தது. மாயக்கண்ணாடி தனக்கு மீண்டும் பிரேக் கொடுக்கும் என நினைத்திருந்த நவ்யாவுக்கு படம் போண்டி ஆனதால் பெரும் அப்செட் ஆகி விட்டதாம்.
இந்த வருத்தத்தில் இருந்து வரும் நவ்யாவைத் தேடி தற்போது புது படம் வந்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் ஜெயராம், தமிழில் கண்கள் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் நவ்யா நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக வின்சென்ட் அசோகன் நடிக்கவுள்ளார். இந்தப் படம் தனக்கு கை கொடுக்கும், தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியான வாழ்க்கையைக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ளாராம் நவ்யா.
இப்படத்தில் முதல் முறையாக கிளாமரிலும் நடிக்கவுள்ளார் நவ்யா. இதுவரை பெரிய அளவில் கிளாமர் ரோல் பண்ணியிராத நவ்யா, இனிமேலும் அப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்பதால்தான் கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











