சில நேரங்களில் .. நவ்யா!
சேரனுடன் சேர்ந்து நடித்த மாயக்கண்ணாடி சிதறிப் போய் விட்டதால் அப்செட்டில் இருந்த நவ்யா நாயர் தற்போது ரெஃப்ரஷ் ஆகி புதிய தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார்.
விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருந்த நவ்யா நாயர் சேரனுடன் நடிக்க ஆரம்பித்த பின்னர் முடங்கிப் போனார். இருவரும் இணைந்து முதலில் ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்தனர். படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.அடுத்து ஜோடி சேர்ந்த படம்தான் மாயக்கண்ணாடி. பெரிய அளவில் எதிர்ப்பாக்கப்பட்ட இப்படம் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியது. இதனால் சேரனை விட அப்செட்டாக இருந்தவர் நவ்யாதான். காரணம், மாயக்கண்ணாடி பெரும் பிரேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் இருந்தார் நவ்யா.
ஆனால் மாயக்கண்ணாடி ஏமாற்றி விட்டதால் கப்சிப் ஆகி விட்டார் நவ்யா. இந்த நிலையில் மலையாள இயக்குநர் ஜெயராஜ் தமிழில் முதல் முறையாக இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நவ்யாவைத் தேடி வந்துள்ளது. சில நேரங்களில் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் நவ்யா நாயர் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படம் நவ்யாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் என்று ஜெயராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படத்தில் நாயகனாக நடிப்பது வின்சென்ட் அசோகன். இவர் வேறு யாருமல்ல, அந்தக் கால வில்லாதி வில்லன் அசோகனின் மகன்தான். இப்படம் மூலம் ஹீராவாக அறிமுகமாகிறார்.
இந்தப் படம் தவிர சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலுடன் அலிபாய் என்ற படத்தில் நடிக்கவும் புக் ஆனாராம் நவ்யா. இப்படத்தை இயக்கப் போவது ஷாஜி கைலாஷ்.
சில நேரங்களில் தவிர தமிழில் கெளதம் மேனன் இயக்கவுள்ள வல்லமை தாராயோ மற்றும் சிம்புதேவனின் அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்ளிலும் நவ்யா நாயர் நடிக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











