மம்முட்டி படத்திற்காக கொள்கையைத் தளர்த்திய நயன்தாரா
திருவனந்தபுரம்: தாய் மொழியான மலையாளத்தில் 2 வருடத்திற்கு ஒரு படம் தான் என்று கொள்கையுடன் செயல்பட்டு வந்த நடிகை நயன்தாரா, மம்முட்டியின் படத்திற்காக தனது கொள்கையை தளர்த்தி இருக்கிறார்.
மலையாளத்தில் கடைசியாக நயன்தாரா மம்மூட்டியுடன் நடித்து வெளியான படம் பாஸ்கர் த ராஸ்கல். இந்தப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததோடு ஒரு குழந்தைக்குத் தாயாக வீட்டில் ஹோம் மேட் சாக்கலேட்டுகள் செய்து வாழ்வில் முன்னேறும் பெண்ணாகவும் நடித்திருப்பார்.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் 23 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.
சொந்த மண் மலையாள சினிமாவாகினும் தமிழுக்கே முன்னுரிமை என்ற ரீதியில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வீதம் தெலுங்கு, மலையாளம் என நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நயன்தாரா.
சமீபத்தில் இயக்குநர் சஜன் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தின் கதையை நயனிடம் கொடுத்துள்ளார். கதையைப் படித்த நயன்தாரா சிறிதும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார்.
மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இரு தம்பதிகளின் ஈகோ பிரச்னைகள் அதைச் சூழ்ந்த கதைதான் படமாம். இரண்டு வருடம் கழித்துதான் அடுத்த படம் என்றக் கட்டுப்பாடோடு இருந்த நயன்தாரா நல்லகதை என்றவுடன் தற்போது ஓகே சொல்லியுள்ளார் என இயக்குநர் சஜன் தெரிவித்திருக்கிறார்.
கதைப்படி லூயிஸ் போதென் என்னும் வக்கீலாக மம்முட்டியும், மம்முட்டியின் குணத்திற்கு நேரெதிரான வாசுகி என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவிருக்கின்றனராம்.
கதை பிடித்திருந்தால் நயன்தாரா யோசிக்காமல் ஒப்புக்கொள்வார், என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த நிகழ்வு.


Click it and Unblock the Notifications











