கேட்ட சம்பளம் ஓகே.... சிரஞ்சீவிக்கு ஜோடியானார் நயன்தாரா!!
கேட்ட சம்பளத்தைத் தர ஒப்புக் கொண்டதால் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராகத் திகழ்ந்தவர் சிரஞ்சீவி. மெகா ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திடுதிப்பென்று கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தார்.
பின்னர் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமாகி, மத்திய அமைச்சர் பதவியையும் அனுபவித்தார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவ, இப்போது சிரஞ்சீவிக்கு இரண்டும் கெட்டான் நிலை. அரசியலும் இல்லை... சினிமாவும் இல்லை.

இப்படியே இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்தாரோ என்னமோ... மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
இப்போது அவர் நடிக்கும் படம் 150வது படமாகும். வி.வி.விநாயக் இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
விழாக்களில் பங்கேற்க மறுக்கிறார் என்று கூறி நயன்தாராவுக்கு தெலுங்கில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடையும் நீங்கியுள்ளதாலும், சிரஞ்சீவி படத்துக்காக கேட்ட சம்பளத்தைத் தர தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாலும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கிறார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











