தண்ணியப் பாத்தா பயமில்ல.. தண்ணில வண்டி ஓட்டறவங்கள பாத்தாதான்...! - நாயகி நேஹா
வி.வி.ஆர் சினி மாஸ்க் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்'. இதில் நாயகியாக அறிமுகமாகிறார் நேஹா ரத்னாகரன்.
இப்படத்தின் நாயகனாக சின்னத்திரை தீபக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேஹா ரத்னாகரன் அறிமுகமாகிறார். எஸ் என் சக்திவேல் இயக்கியிருக்கிறார்.
ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியை சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன்.

நேஹா ரத்னாகரன்
இந்தப் படத்தின் நடித்த அனுபவம் பற்றி பேசிய நேஹா ரத்னாகரன், "மாடலிங், விளம்பர படங்கள்ன்னு நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்து பெண்கள் பிரபலமாவது தமிழில்தானே. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னை மட்டும் தவிக்க விட்டு விடுமா என்ன...?

இவனுக்கு தண்ணில கண்டம்
அப்போதுதான் இந்த ‘இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ‘தீபிகா' என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துருதுரு வாயாடியான சென்னை பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்' போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பதே என் குறிக்கோள்.

சிரிப்பு காட்சிகள்
"ஹீரோ தீபக், நடிப்பில் சீனியராக இருந்தாலும், நான் முதல் படம் நடிக்கிறேன் என்று எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் தன்மையாய் பழகக் கூடியவர். காமெடி படம் என்பதாலோ என்னவோ நான் சீரியசான காட்சிகள் நடித்தாலும் சுற்றி இருப்பவர்கள் சிரித்து கொண்டே இருப்பார்கள். எனினும் இயக்குனர் எனக்கு அனைத்து காட்சிகளையும் சரிவர செய்ய உதவினார்.

என்ன கண்டம்?
"படத்தின் தலைப்பு போல் ஏதேனும் தண்ணியால கண்டமான அனுபவம் உண்டா..?" என்று கேட்ட பொழுது "எனது ஊரைச் சுற்றிலும் தண்ணீர் மட்டுமே காணப்படும். தண்ணீரில் பயம் என்றெல்லாம் இல்லை. எனினும் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பார்த்தால், எங்கே நம் மீது மோதி விடுவார்களோ என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கும்..," என்றார்.
தமிழ்நாட்டு நெலவரத்தை நல்லா தெரிஞ்சிட்டுதான் வந்திருக்கார்!


Click it and Unblock the Notifications











