அங்கிட்டு அஜீத், இங்கிட்டு கமல்: குஷியில் துள்ளும் பார்வதி நாயர்
சென்னை: அஜீத், கமல் ஹாஸனுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை என புதுமுக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக அழகியான பார்வதி நாயர் அஜீத்தின் என்னை அறிந்தால், கமல் ஹாஸனின் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த பார்வதி நடிக்க வந்த கையோடு இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

பார்வதி
புதுமுகம் என்பதால் சிறிய படங்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். இப்படி பெரிய ஹீரோக்களின் படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

என்னை அறிந்தால்
என்னை அறிந்தால் கௌதம் மேனன் படம், அவர் படத்தில் வரும் பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால் அந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.

அஜீத்
படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று என்னுடைய ஆளுயர புகைப்படத்தை பரிசளித்து அசத்திவிட்டார் அஜீத். அவர் என்னை அழகாக புகைப்படம் எடுத்து அதை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்து, பிரேம் போட்டு பரிசளித்தார். அவர் அருமையாக புகைப்படம் எடுப்பார். அவர் என் நடிப்பை பாராட்டியே அந்த பரிசை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன்.

பதட்டம்
படத்தில் கமல் ஹாஸனை பார்த்துள்ளேன். ஒரு முறை ஏவிஎம் ஸ்டுடியோவில் பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் எந்த பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது இல்லை. உத்தம வில்லன் படப்பிடிப்பின் முதல் நாள் பதட்டமாக இருந்தது.

அஜீத், கமல்
அஜீத் சாரும் சரி, கமல் சாரும் சரி படப்பிடிப்பில் நான் பதட்டமில்லாமல் நடிக்க உதவி செய்தார்கள். என்னை அறிந்தால், உத்தம வில்லன் படங்களில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது என்றார் பார்வதி.


Click it and Unblock the Notifications











