பிரபல நடிகையிடம் சில்மிஷம்.. இளைஞர்களின் போட்டோவை வெளியிட்ட போலீஸ்.. மன்னிப்பு கேட்கத் தயாராம்!
கொச்சி: பிரபல நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் நடிகையிடம் மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
மலையாள நடிகை அன்னா பென். ஹெலன் படம் மூலம் கேரள ரசிகர்களிடம் பிரபலமானார்.
கும்பளாங்கி நைட்ஸ், கப்பேலா ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடுத்தும் சில படங்களில் நடித்து வருகிறார்.

கடந்து சென்றனர்
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் சில நாட்களுக்கு முன் நீண்ட பதிவை வெளியிட்டிருந்தார். ''சூப்பர் மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் இரண்டு பேர், என்னை கடந்து சென்றனர். ஒருவர் என்னை கடந்து செல்லும்போது என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார்.

சொல்ல முடியவில்லை
அது அதிர்ச்சியை கொடுத்ததால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. நான் அவர்களை நோக்கி சென்ற போது என்னை முற்றிலுமாக தவிர்த்தனர். அப்போது கடுமையான கோபத்தில் இருந்தேன். அவர்களை எதுவும் சொல்ல முடியவில்லை. பின் நானும் என் சகோதரியும் அம்மா மற்றும் சகோதரர் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றோம்.

குற்ற உணர்ச்சி
அவர்கள் எங்களை பின் தொடர்ந்து வந்து பேச முயன்றனர். நான் நடித்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ள விரும்பினர். தூரத்தில் என் அம்மா வருவதைப் பார்த்ததும் சென்று விட்டனர். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சென்ற அவர்கள் இதை மீண்டும் செய்வார்கள் என்று நினைக்கும்போது, எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

சோர்வு தருகிறது
ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருப்பதால், பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது. வெளியே செல்லும் என் அம்மா, தங்கை, தோழிகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது. காரணம் இது போன்ற தவறான எண்ணம் கொண்ட ஆண்களால்தான்'' என்று உருக்கமாக கூறியிருந்தார்.

சிசிடிவி காட்சிகள்
இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்த செய்தி, கொச்சி போலீஸ்
கமிஷனருக்கு சென்றதை அடுத்து அவர் சம்மந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு
பார்வேட் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

முகக் கவசம்
அவர்கள் மலப்புரம் பகுதியை இர்ஷத், ஆதில் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதுவும் வாங்காமல், சும்மா அந்த மாலில் சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர். மாஸ்க் அணிந்திருப்பதால் முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

மன்னிப்புக் கேட்க
இதையடுத்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த இளைஞர்கள், போலீசிடம் விரைவில் சரணடைய இருப்பதாகவும் அது எதிர்பாராமல் நடந்தது என்றும் அதற்காக நடிகையிடம் மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாகக் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











