கைக் காசைப் போட்டு "முத்துராமலிங்கத்தை" மீட்ட பிரியா ஆனந்த்
சென்னை: முத்துராமலிங்கம் படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நடிகை பிரியா ஆனந்த் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வந்த படம் முத்துராமலிங்கம். புதுமுக இயக்குநர் ராஜதுரை இயக்கி வரும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்புத் தரப்பின் சொதப்பல் காரணமாக இப்படம் பாதியில் நிற்கும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.

முத்துராமலிங்கம்
'வை ராஜா வை' படத்திற்குப் பின் 'முத்துராமலிங்கம்' படத்தில் கவுதம் கார்த்திக்- பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.

கமல்ஹாசன்
இப்படத்திற்காக 'தெற்கு தேச சிங்கமடா' என்ற ஒரு பாடலை சமீபத்தில் கமல்ஹாசன் பாடியிருந்தார். மேலும் கார்த்திக், பிரபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவிருந்தனர்.

குற்றாலம்
முத்துராமலிங்கம் முதற்கட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் கிளம்புகிற வேளையில், தயாரிப்புத் தரப்பு ஹோட்டலுக்கான பில்லை செலுத்தவில்லையாம். இதனால் கட்டணத்தை கொடுத்து விட்டு கிளம்புமாறு ஹோட்டல் தரப்பு கூறிவிட, படக்குழு செய்வதறியாமல் தவித்து நின்றதாம். இந்த செய்தி நாயகி பிரியா ஆனந்தின் காதுகளை எட்ட அவர் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கியிலிருந்து பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தொடருமா?
தயாரிப்புத் தரப்பின் இந்த சொதப்பலால் படம் மேற்கொண்டு வளருமா? என்பதே சந்தேகம்தான் என்கின்றனர். ஆனால் படம் வளருமோ இல்லையோ என்று துளியும் கவலைப்படாமல், தனது படத்தைக் கொடுத்த பிரியா ஆனந்தின் செயல் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











