அந்தப் பக்கம் ஹரி.. இந்தப் பக்கம் அருண் விஜய்.. நடுவில் நின்று நச்சுன்னு கேக் வெட்டிய ராதிகா.. செம!
சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் திரையுலகில் நுழைந்து 43 ஆண்டுகள் நிறைவு செய்ததை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் .
இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் ராதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
நடிகை ராதிகா சரத்குமார் 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

கிழக்கே போகும் ரயில்
இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தார் ராதிகா. இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் இன்று வரை நம் மனதில் ரம்மியமாக இருப்பது அந்த பாஞ்சாலி கதாபாத்திரம் தான். தமிழை சரியாக பேச தெரியாமல், அழகு தமிழ் பேசி அசத்தி இருப்பார். நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

முன்னணி நடிகர்களுடன்
முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு பல படவாய்ப்புகள் வந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. ரஜினி , கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து. முன்னணி நடிகை ஆனார். நதியா, ராதா, அம்பிகா போன்ற பல முன்னணி நடிகைகள் இருந்த கால கட்டத்தில் தனக்கென தனி இடத்தைப்பிடித்து இன்று வரை அந்த இடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.

சித்தி
திரைத்துறையில் மட்டும் அல்ல தொலைக்காட்சியிலும் தடம்பதித்து அதிலும் வெற்றிகண்டார். சித்தி, அண்ணாமலை,வாணி ராணி என இவர் இயக்கிய அனைத்து தொடர்களுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக சித்தி தொடரை இல்லத்தரசிகள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் கொண்டாடினர்.

குல தெய்வ கோயிலில்
தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டி அதை விசாலமாக பறக்கவும் விட்டுள்ளார் ராதிகா. இந்த நிலையில், திரைத்துறையில் 43வது ஆண்டை நிறைவு செய்த ராதிகா, தனது குல தெய்வ கோவிலுக்கு சென்று மனம் உருகி சாமி தரிணம் செய்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர் .

ராதிகாவுக்கு சர்ப்ரைஸ்
தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், ராதிகா சினிமாவில் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழுவினர் சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு மத்தியில் இடைவேளை சர்ப்ரைசாக பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி ராதிகாவை மகிழ்வித்தனர். இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் ராதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

AV33
அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக அருண்விஜய் 33 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹரியின் படங்களைப் போலவே இப்படமும் குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











