ஏ.. முத்தழகு... இயக்குநர் ராமுக்கு ஜோடியாகிறார் பிரியா மணி!
சென்னை : மிஷ்கின் திரைக்கதை எழுதும் புதிய படத்தில் இயக்குநர் ராம்-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை பிரியாமணி.
கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியாமணி. கடந்த 2007ம் ஆண்டு அமீரின் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.
ஆனால், தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையாதததால், பிரியாமணியை கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்க்க இயலவில்லை. இந்நிலையில், இயக்குநர் ராம் ஜோடியாக நடித்து, மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார் பிரியாமணி.

கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தங்கமீன்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். இவர் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையே, மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் படமொன்றில் நடிக்கவும் ராம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு மிஷ்கின் திரைக்கதை எழுதுகிறார். அதோடு வில்லன் கதாபாத்திரத்திலும் அவரே நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் பெயரிடப்படாத அந்தப் புதிய படத்தில் ராமுக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











