ராமின் அடுத்த படத்திலும் ஹீரோயின் இவர் தானா..?
சென்னை : இயக்குநர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி, வசந்தபாலன் இயக்கத்தில் 'அங்காடித் தெரு' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தற்போது நடிகர் ஜெய் ஜோடியாக 'பலூன்' படத்திலும் ராம் இயக்கத்தில் 'பேரன்பு' படத்திலும் நடித்துவருகிறார். ராம் இயக்கத்தில் 'தரமணி' படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில், அஞ்சலியை லீட் ரோலில் நடிக்கவைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என ராம் கூறியிருக்கிறார்.

'அஞ்சலி எனது படத்தில் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாகவும் நடித்தார். அவரை லீட் ரோலில் வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. தரமணி படத்தில் நீங்கள் நடித்தால் வியாபார ரீதியில் நன்றாக இருக்கும் எனக் கேட்டேன். துளியும் யோசிக்காமல் நடித்துக் கொடுத்தார்.

'பேரன்பு' படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடினமான காட்சியில்கூட எளிதாக நடித்துவிடும் அஞ்சலியை இந்தப் படம் பெரிதாகப் பேசவைக்கும். இந்தப் படத்தையடுத்து ஏற்கெனவே நான் யோசித்து வைத்திருக்கும் கதையில் கதையின் நாயகியாக அஞ்சலியை நடிக்கவைக்க முடிவு செய்து வைத்திருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ராம்.


Click it and Unblock the Notifications











