ஆண்டவன் கட்டளையில் புலனாய்வு நிருபராக நடிக்கும் ரித்திகா சிங்
சென்னை: நடிகை ரித்திகா சிங் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் புலனாய்வு நிருபராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மதுரை படத்திற்குப் பின்னர் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்திற்குப் பின்னர் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார்.

ஆண்டவன் கட்டளை படத்தை மணிகண்டன் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்பு செழியன் தயாரிக்கிறார். படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் எடிட்டராக 'கிருமி' இயக்குநர் அனுசரண் பணியாற்ற இருக்கிறார்.
கதைபடி விஜய் சேதுபதி ஐ.டி. துறையில் வேலை செய்து வருகிறார். படத்தில் ரித்திகாசிங் துணிச்சல் மிகுந்த புலனாய்வு பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்கிறார். ஒரு பெரிய கொலை குற்றத்தை தன் பத்திரிகை திறமையால் கண்டுபிடிப்பதுதான் படத்தை கதையாம்.
விஜய் சேதுபதியை கண்டு தினமும் பயப்படுவாராம் ரித்திகாசிங். காரணம் அவர் முகம் எப்போதும் கோபமாக இருக்கும் என்பதால் வந்த பயமாம். சினிமாவிற்காக அவர் ரியாக்ஷன்தான் அப்படி என்று தெரியவரவே அப்புறம் ஜாலியாக பழக ஆரம்பித்து விட்டாராம் ரித்திகா சிங்.
விஜய்சேதுபதி, ரித்திகா சிங் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிற கதை. விரைவில் இந்தப் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்துக்காக பிரம்மாண்டமான தூதரகம் அரங்கு அமைத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் கதைகளம் குறித்து இயக்குநர் மணிகண்டன் 'காக்கா முட்டை' படம் போல 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் இருக்காது. எதார்த்தத்தை மீறாத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
சாதாரண மனிதன் பார்வையில் இந்த அமைப்பின் மீது இருக்கும் பிரச்சினைகளை இப்படம் பேசும். வழக்கமாக நீங்கள் பார்க்கும் நாயகி போல ரித்திகா சிங் இப்படத்தில் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் மணிகண்டன்.
காக்கா முட்டை படத்திற்குப் பின்னர் வித்தார்த் நடிப்பில் மணிகண்டன் இயக்கி உள்ள படம் 'குற்றமே தண்டனை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











