நினைத்ததைவிட நோய்க்கொடுமை கடுமையாக இருக்கு.. சமந்தாவை தாக்கிய அரிய வகை நோய்.. தப்பிப்பது எப்படி?
சென்னை: நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு அது தொடர்பான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் நினைத்த நிலையில், அவர் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் என தெரிந்த உடனே தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த எச்சரிக்கை மணியை சமந்த அடித்துள்ளார்.
அரிய வகை நோயான இந்த மயோசிட்டிஸ் அதிகளவில் பெண்களை தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த நோய் எதனால் வருகிறது. ஒருவேளை இந்த நோய் பாதித்தால் அதனை எந்த அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

நோயால் அவதிபடும் சமந்தா
எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது. நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

மோசமான நாட்கள்
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர்கொண்டுள்ளேன். இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது எனத் தோன்றிய போது அதுவும் கடந்து சென்றிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு நாளில் குணமாகி விடும் தருணத்தை நெருங்கி விட்டேன் என்று தான் நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.

மயோசிட்டிஸ் என்றால் என்ன?
சமந்தா தற்போது பகிர்ந்திருக்கும் இந்த மயோசிட்டிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோய் என்றால் என்ன? அது எப்படிப்பட்ட பிரச்னைகளை கொடுக்கும் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அதாவது, மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் என்று பொதுவாகக் கூறலாம். இந்நோய்க்கான காரணம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் வேறுபாடு.

தசைகள் பாதிக்கப்படும்
இந்த நோயால் பாதிக்கப்படும் ஒருவரின் உடல் தசைகள் மீது அவரது நோய் எதிர்ப்பாற்றல் நடத்தும் தாக்குதலால் தசைகள் பாதிக்கப்படும். இது பொதுவாக கை தசைகள், தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிற்று தசைகளைத்தான் தாக்கும். இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், எடை குறைப்பு, மூட்டு வலி, மயக்கம், தசைகளில் வலி உருவாகும்.

நடக்கவே சிரமம் ஆகிவிடும்
நோயின் ஆரம்பக்கட்டத்தில், பாதிக்கப்பட்டவர் எழுந்து நடக்கவே சிரமப்படுவார். நோய் தீவிரமாகும் போது அமர்ந்திருந்தால், எழுந்து நிற்கவும், உறங்கும் போது தனது நிலையை மாற்றவும் கூட சிரமப்படுவார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த பாதிப்பு உடலில் இதர தசைப்பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உண்டு. இதனால் திரவ உணவுகளைக் கூட விழுங்க முடியாமல் அவதிப்படக்கூடும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலங்களையும் தாக்கி, நோயாளியால் மூச்சு விட முடியாத நிலையும் ஏற்படலாம்.

தடுக்க முடியுமா?
ஒரு சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமல், சளி போன்ற தொந்தரவுகள் கூட ஒரு வகையான தசை அழற்சி நோயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதாம். அதையும் தாண்டி, சில வகை பாக்டீரியா மற்றும் இதய நோய் சார்ந்த மருந்துகளும் தசை அழற்சியை ஏற்படுத்துகிறதாம். ஆனால், இந்த தசை அழற்சி எனப்படும் மயோசிட்டிஸ் நோயை தடுக்க எந்த வழியும் இல்லை. இது ஒரு உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் மாறுபாடு. இதற்கு உரிய காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகையால், இதனை வராமல் தடுப்பது என்பது இயலாத காரியம் என்றும் மருத்துவத் துறை கூறுகிறது.

பெண்களை பாதிக்கும்
இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. யாருக்கேனும் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மூட்டு வாத நோய் நிபுணர்களை ஆலோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதாவது, உடலில் பலவீனம், தொடை அல்லது தோள்பட்டை தசைகளில் பலவீனம், சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படுவது போன்றவைதான் அறிகுறிகள் என்கிறார்கள்.

குணப்படுத்த முடியும்
தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும், சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தொடங்கினால், மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சியை நிச்சயம் குணப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications











