நிறைய கத்துக்கணும்-சந்தியா
மாலை நேரத்து மஞ்சள் வெயிலாக படு இதமாக மஞ்சள் வெயில் படத்தில் நடித்து வருகிறார் சந்தியா. ஒரு சாயங்கால வேளையில் சந்தியாவை பார்த்தபோது, சலசலவென சில கேள்விகளை எடுத்து அவர் முன் போட்டோம். மோனலிசா பாணி மர்ம புன்னகையுடன் சந்தியா பதில் கொடுத்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிப் படங்களில் நடித்து விட்டீர்கள். நல்ல அனுபவம் வந்திருக்குமே என்று ஆரம்பித்தோம். அதற்கு சந்தியா, அனுபவமா, இன்னும் நிறையக் கத்துக்கணும் சார்.தெலுங்கில் அண்ணாவரம் படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அதில் எனது சொந்தக் குரலில் பேசி நடித்தேன். மலையாளத்தில் 2 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கடைசியாக வந்த கூடல் நகர் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது.
இப்போது கண்ணாமூச்சி ஏண்டா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இரண்டுமே எனக்கு நல்ல பெயரைக் கொடுக்கும். கண்ணாமூச்சி ஏண்டா படத்தில் ஜோடி பிருத்விராஜ். மாலை நேரத்து மயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தி. இருவருமே சிறப்பான நடிகர்கள் என்பதால் நானும் சிறப்பாக நடித்தே ஆக வேண்டிய கட்டாயம் என்று செல்லமாக அலுத்துக் கொண்டார் சந்தியா.
இடையில் விழுந்த சிறிய இடைவெளிக்கு நான் மட்டும் காரணமல்ல. நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன். அதனால்தான் கொஞ்சம் கேப் விழுந்து விட்டது. இப்போது நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
கிளாமர் மட்டும் காட்டும் நடிகையாக நீண்ட காலம் இருக்க முடியாது. நடிப்புதான் முக்கியம். எனக்கு நல்ல நடிப்பு உள்ளது. கிளாமர் எனக்கு ஒத்துவராது. அதனாலும் கூட கேப் விழுந்திருக்கலாம்.
அண்ணாவரம் படத்தோடு தங்கை வேடத்துக்கு குட்பை சொல்லி விட்டேன். இனிமேல் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன். வல்லவன் படத்தில் நடித்ததற்காக இன்றும் கூட வருந்துகிறேன். அதில் எனக்கு திருப்தியே இல்லை என்றார் சந்தியா.
சந்தியாவுக்குப் பிடித்த நடிகை ஜோதிகாவாம். சினிமா உலகில் அவருடைய தோழி பாவனாவாம். கிளாமருக்கு மாறாதவரை உங்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பு குறைச்சல்தான்!


Click it and Unblock the Notifications











