கன்னடத்தில் சந்தியா!

தமிழில் காதல், டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்கள் மூலம் நல்ல நடிகையாக அறியப்பட்டு வலம் வந்து கொண்டிருக்கும் சந்தியா, தாய் மொழியான மலையாளத்திலும் தலை காட்டினார். பிறகு தெலுங்குக்குப் போன அவருக்கு அன்னாவரம் வெற்றியைக் கொடுத்தது.
தமிழில் வெளியான திருப்பாச்சி படம்தான் தெலுங்கில் அன்னாவரமாக மாறியது. இதில் பவன் கல்யாணின் தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தார் சந்தியா. படப்பிடிப்பின்போதே தெலுங்கையும் பேசக் கற்றுக் கொண்டு சொந்தக் குரலிலேயே டப்பிங்கும் பேசி அசத்தினார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்திற்குப் போயுள்ளார் சந்தியா. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடைசி மகனான புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் சந்தியா.
இப்படத்தை இயக்கவிருப்பது ஷோபன். இவர் ஏற்கனவே தெலுங்கில் திரிஷாவை வைத்து வர்ஷம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் மழை என்ற பெயரில் ஷ்ரியாவின் நடிப்பில் உருவானது.
கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட சந்தியாவுக்கு சுத்தமாக தெரியாதாம். இருந்தாலும் படப்பிடிப்பின்போதே பாஷையைக் கற்றுக் கொண்டு விட தீர்மானித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











