செட்டிலாகும் சங்கீதா!
உயிர் சங்கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் அவரது குடும்பத்தினர் படு தீவிரமாக இறங்கியுள்ளனராம்.
பாண்டியராஜனுக்கு ஜோடியாக கபடி கபடி மூலம் நடிக்க வந்தவர் சங்கீதா. அப்போது அவரது பெயர் ராசி. முதல் படம் சுமாராக ஓடியதாலும், தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் வராததாலும் ராசியில்லாத நடிகையாகவே இருந்து வந்தார் சங்கீதா.இடையில் சுத்தமாக தமிழ் கைவிட்டு விடவே தெலுங்குக்குப் போனார். அங்கு கிளாமர் நடிப்பில் பிசியாக இருந்து வந்த சங்கீதாவுக்கு பாலாவின் பிதாமகன் எதிர்பாராத பிரேக்கைக் கொடுத்தது.
அதுவரை கவர்ச்சிப் பதுமையாக மட்டுமே இருந்து வந்த சங்கீதா, பிதாமகனுக்குப் பிறகு நடிக்கவும் தெரிந்த நடிகையாக பார்க்கப்பட்டார் சங்கீதா. இருந்தாலும் பிதாமகனுக்குப் பிறகும் கூட சங்கீதாவுக்கு வாய்ப்புகள் குவிந்து விடவில்லை.
இதனால் அப்செட்டாகி இருந்த சங்கீதாவுக்கு கை கொடுப்பது போல வந்தது உயிர். அதில் அவர் ஏற்று நடித்த அருந்ததி கேரக்டர் பலத்த சர்ச்சையைக் கொடுத்தாலும் கூட சங்கீதாவுக்கு மிகப் பெரிய மார்க்கெட் பலத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சங்கீதா. தற்போது படு பிசியாக, ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து விட அவரது குடும்பத்தால் படு மும்முரமாக களம் இறங்கியுள்ளனராம்.
சங்கீதாவும் கல்யாணத்திற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். கல்யாண முஸ்தீபுகள் குறித்து சங்கீதாவிடம் கேட்டபோது, வாழ்க்கையில் செட்டிலாக இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். எனக்குப் பொருத்தமான மாப்பிள்ளையை எனது பெற்றோர் பார்த்து வருகின்றனர்.
கையில் இருக்கும் படங்களை முடித்து விட்டு சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகிறேன். எனக்கு காதல் கல்யாணங்களில் நம்பிக்கை இல்லை. எனக்குப் பொருத்தமானவராக நான் கருதுபவரிடம் என்னை மொத்தமாக ஒப்புவிக்க தயாராக இருக்கிறேன் என்றார் சங்கீதா.
பொருத்தமானவர்கள், அப்ளிகேஷன் போட்டு பாருங்களேன்!


Click it and Unblock the Notifications











