அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்! - சானியாதாரா
அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்புமுனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா.
தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த் தேசம் வந்திருக்கும் இவர் பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார். அதனால்தான் ஒருவேளை தனக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லையோ என்று நொந்து கொள்கிறது இந்த ஆந்திரக் கிளி.
நடிப்பாற்றல், நடனத் திறமை, அழகான தோற்றம், அணுக எளிமை அனைத்தும் இருக்கின்றன. குறையொன்றுமில்லைதான். கையில் சில படங்கள் இருக்கின்றன. ஆனாலும் நல்லதொரு பிரேக்குக்காகக் காத்திருக்கிறார்.

யாரிந்த சானியா தாரா ?
2015-ல் வெளியான 'ஜிகினா' படத்தின் நாயகி, 'வாராயோ வெண்ணிலாவே' படத்தில் சின்ன பாத்திரத்திலும் கவர்ந்தவர். சுசீந்திரன் இயக்கிய ஜீவாவில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.
இயற்பெயர் சானியா ஷேக், பிடித்த நடிகை நயன்தாரா என்பதாலோ என்னவோ எண் கணிதப்படி பெயரும் சானியாதாரா என்று அமைந்து விட்டது.
சிறுவயதிலேயே சினிமா ஆர்வம். நடனம் கற்றார். சில விளம்பரப் படங்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு வரவே சினிமாப் பக்கம் வந்து விட்டார்.

சானியாவுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்?
"பேய்ப் படங்கள், திகிலூட்டும் திரில்லர் படங்கள் எனக்கு பிடிக்கும். 'சந்திரமுகி' ஜோதிகா என்னை கலங்க வைத்தவர்'' என்கிறார்.
'சானியாதாரா' என்கிற பெயரில் இவருக்குப் பிடித்த நயன்தாரா பெயர் இருப்பதில் மகிழ்கிறார். தான் நயன்தாராவில் பாதி என்று இந்த வகையிலாவது மகிழ முடியும் அல்லவா?

எந்த மாதிரி வேடங்கள் பிடிக்கும்?
சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும். கமர்ஷியல், சீரியஸ் என பேதமில்லாமல் எல்லாவித படங்களிலும் நடிக்க வேண்டும்.

ஏன் சரியான படம் வரவில்லை?
"எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும். அது வந்துவிட்டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்.
இந்த' சானியா 'வின் திறமைக்குத் 'தீனியா' வரும் நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கிறேன்,'' என்கிறார் நம்பிக்கையுடன்.


Click it and Unblock the Notifications











