விருது விரும்பி ஷ்ரேயா!
மாடர்ன் ஸ்டார் ஷ்ரேயா ரெட்டிக்கு விருதுப் படமாக பார்த்துப் பார்த்து நடிப்பது ஹாபியாக மாறி வருகிறதாம். எப்படியும் விருது வாங்கி விட வேண்டும் என்ற வெறியுடன் திரிகிறாராம் ஷ்ரேயா.
எஸ்.எஸ். மியூசிக்கில் அவர் பாட்டுக்கு ஜாலியாக புரோகிராம் கொடுத்துக் கொண்டிருந்தார் ஷ்ரேயா. அவரைக் கூப்பிட்டு தனது திமிரு படத்தில் பாவாடை, தாவாணியில் மதுரைக்கார ரவுசுப் பெண்ணாக நடிக்க வைத்து அவரை திசை திருப்பி விட்டு விட்டார் விஷால்.தனது கேரக்டருக்கும், பழக்க, வழக்கத்திற்கும், ஊருக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரத்தில் திமிரு படத்தில் நடித்திருந்தார் ஷ்ரேயா. இந்தப் படத்தில் அவரது கேரக்டர் வெகுவாகப் பேசப்படவும், ஷ்ரேயாவைத் தேடி அதே டைப்பில் பல படங்கள் வந்தன.
ஆனால் வில்லியாக நடிப்பதை விட விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க தீர்மானித்தார் ஷ்ரேயா. அடுத்து வெயில் படத்தில் அவரது கேரக்டர் வெகுவாகவே பேசப்பட்டது.
கிழிஞ்ச துணியில், அழுக்கு முகத்துடன் படு இயல்பாக நடித்திருந்தார் அப்படத்தில். இதையடுத்து தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்திலும் ஷ்ரேயாவுக்கு சிறப்பான வேடம். தான் நடிக்கும் படங்களில் கேரக்டர்கள் நன்றாகப் பேசப்படுவதாலும், தனது நடிப்பு சிறப்பாக உள்ளதாக எல்லோரும் கூறுவதாலும் விருது வாங்கும் ஆசை வந்து விட்டதாம் ஷ்ரேயாவுக்கு.
தற்போது நடித்துள்ள பள்ளிக்கூடம் படத்தில் தனது கேரக்டருக்கு நிச்சயம் ஏதாவது ஒரு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஷ்ரேயா. எப்படியும் தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியே ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இப்போது உள்ளாராம்.
இதனால் தன்னைத் தேடி கால்ஷீட் கேட்டு வருகிறவர்களிடம், விருது வாங்குவது போன்ற கேரக்டராக இருந்தால் சொல்லுங்கள், உடனே கால்ஷீட் தருகிறேன் என்கிறாராம்.
பள்ளிக்கூடத்தை முடித்து விட்ட ஷ்ரேயா அடுத்து காஞ்சீபுரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படமே விருதைக் குறி வைத்து எடுக்கபப்டும் படம்தான். இப்படத்தில் வறுமையில், 2 குழந்தைகளுடன், புருஷன் துணையின்றி வாழும் போராட்டம் நிறைந்த பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் ஷ்ரேயா.
விருதைக் குறி வைத்து ரெட்டி போட்டு வரும் நடை, அவருக்கு நிச்சயம் வாங்கித் தரும் விருதை என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











