'மை டே இன் தி சன்' பெண்களுக்காக குரல் கொடுக்கும் சுருதிஹாசன்
சென்னை: பெண்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடலொன்றை வருகின்ற மகளிர் தினத்தில் நடிகை சுருதிஹாசன் வெளியிடவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மாறிமாறி படப்பிடிப்பிற்காக பறந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், அவ்வப்போது தனக்குப் பிடித்தமான வேலைகளை செய்திடவும் தவறுவதில்லை.

கடந்த காதலர் தினத்தில் அனிருத், யுவன் ஆகியோரின் சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியாகின. அதே போல இந்த மகளிர் தினத்திற்கு சிங்கிள் டிராக் ஒன்றை சுருதிஹாசன் வெளியிடுகிறார்.
'மை டே இன் தி சன்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் பாடலுக்காக எஷான் நூரானி மற்றும் லோய் மெண்டோன்சா போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் அவர் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இது குறித்து சுருதி " இந்தப் பாடல் வெளியிடுவதன் முக்கிய நோக்கமே எல்லாப் பெண்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான்.
இது பெண்களுக்கான நேரம். இந்தப் பாடலை எழுதிப் பாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இசைக்கலைஞர்கள் எஷான் நூரானி மற்றும் லோய் மெண்டோன்சா இருவரும் "சுருதி ஒரு அற்புதமான பாடலாசிரியர். இசை மற்றும் பாடலின் வரிகள் இரண்டுமே நன்றாக வந்திருக்கின்றன" என்று இப்பாடல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வருகின்ற மார்ச் 8 ல் 'மை டே இன் தி சன்' பாடலின் ஆடியோவை வெளியிடும் சுருதி, ஒருசில மாதங்களில் இப்பாடலை வீடியோ வடிவிலும் வெளியிடவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











