பிடிவாத சிம்ரனம்மா!
நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று படு பிடிவாதமாக இருக்கிறார் முன்னாள் கனவுக் கன்னியும், 2 வயதுக் குழந்தைக்குத் தாயுமான சிம்ரன்.
தமிழ் சினிமாவின் கிளாமர் ராணியாக கொஞ்ச காலம் கொஞ்சியவர் சிம்ரன். கமல் முதல் பாய்ஸ் மணிகண்டன் வரை பலருடனும் நடித்து ரசிகர்களைப் பரசவப்படுத்தினார்.மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது திடீரென கமலுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் டஹால் என ஜஹா வாங்கிய சிம்ரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லாமல், கொள்ளாமல் சினிமாவை விட்டு விலகினார். மனதுக்குப் பிடித்த தீபக் பாஹாவை கல்யாணம் செய்து கொண்டு அப்படியே அவரது குழந்தைக்கும் தாயானார்.
ஆச்சு, சிம்ரனுக்கு கல்யாணமாகி, அவருக்குக் குழந்தை பிறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச காலம் வீட்டோடு இருந்த சிம்ரனுக்கு சினிமா ஆசை துளிர் விடவே, உடலை டிரிம் ஆக்கிக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தார் சிங்காரச் சென்னைக்கு.
நடிக்க ரெடி என்று அவர் அனவுன்ஸ் செய்தும், சீண்டுவார் யாரும் இல்லை. அடடே என்று கலங்கிப் போன அவர் அவ்வப்போது சென்னைக்கு வருவதும், வாய்ப்பு தேடுவதுமாக இருக்கிறார்.
இருந்தாலும் இதுவரை யாரும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இருந்தாலும் மனம் உடையாத சிம்ரன், தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பை தேடிக் கொண்டுதான் உள்ளார்.
நேற்று திடீரென சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிம்ரன். விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்தவர் கிடைத்த கேப்பில் செய்தியாளர்களிடம் அளவளாவினார்.
எப்படி இருக்கீங்க, என்ன சொல்றீங்க என்று சிம்ரனிடம் கேட்டபோது, மீண்டும் தமிழ் சினிமாவில், எனக்குரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது (ஆனா ரசிகர்களுக்கு இல்லையேம்மா!).
நான் பார்த்திபனுடன் இணைந்து நடிக்கப் போவதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை. வாய்ப்பை பறிக்க வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை.
எனக்கான சரியான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க நான் தயாராகத்தான் உள்ளேன். தமிழ் சினிமாவும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் என்னை ஒதுக்கி விட்டார்கள் என்று கூற முடியாது.
இப்போது வரை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுடன் எனக்கு நல்லுறவு இருந்து கொண்டுதான் உள்ளது. இப்போது தமிழில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அது மட்டுமே நான் கையில் வைத்துள்ள படம் என்றார்.
வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது, இல்லை என்றார் சிம்ரன்.
ரொம்ப சம்பளம் கேட்கிறீர்களாமே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. எனக்கு தயாரிப்பாளர்களின் சிரமம் தெரியும் என்று பொத்தாம் பொதுவாக கூறினார் சிம்ரன்.
நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் சிம்ரனை மீண்டும் ஹீரோயினாக அரங்கேற்ற யார் வரப் போகிறார்களோ?


Click it and Unblock the Notifications











