சுந்தர்.சி.யா? சினேகா ஓட்டம்!
சுந்தர்.சி. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஸாரி சொல்லி நிராகரித்து விட்டாராம் சினேகா.
தலைநகரம் எதிர்பாராத வகையில் ஹிட் படமாகி விட, சுந்தர்.சி.யும் ஹீரோவாகி விட்டார். அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பது என்று அடம் பிடித்து நடித்துக் கொண்டும் இருக்கிறார்.தற்போது இயக்குநர்கள் கிச்சா, ஷக்தி சிதம்பரம், சூரஜ், வின்சென்ட் செல்வா ஆகியோரது படங்களில் சுந்தர்.சி. நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மொத்தம் 5 படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி.
அந்த வரிசையில், சுந்தர்.சி நடிக்கும் புதிய படம் ஆயுதம் செய்வோம். விஜயகாந்த்தை வைத்து பேரரசு படத்தைக் கொடுத்த உதயன்தான் இப்படத்தை இயக்குகிறார்.
சாய்மீரா மீடியா குரூப் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதில் சுந்தர்.சி.க்கு யாரை ஜோடியாக போடலாம் என யோசித்தபோது சினேகாவை கேட்டுப் பார்க்கலாம் என நினைத்து அவரை அணுகினர்.
வந்தவர்களை உட்கார வைத்துப் பேசிய சினேகா எடுத்த எடுப்பிலேயே 25 கொடுத்தால் (அதாவது 25 லட்சம்) நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கமாக 15 தானே வாங்குவீங்க என்று தயாரிப்பாளர் தரப்பு கேட்டுள்ளது.
அது வேற, இது வேற 25 கொடுத்தால் நடிக்கிறேன் என்றாராம் சினேகா. கொஞ்சம் யோசித்துப் பார்த்த தயாரிப்பாளர் தரப்பு சரி என்று அதற்கு ஒத்துக் கொண்டு திரும்பியுள்ளது.
ஆனால் அவர்களை போனில் தொடர்பு கொண்ட சினேகா, ஸாரி, இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டாராம்.
சுந்தர்.சியின் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் உருவான சின்னா படத்தில் சினேகாதான் நாயகி. அந்தப் படத்தில்தான் முதல் முறையாக கரைபுரண்டோடிய கிளாமரில் நடித்திருந்தார் சினேகா.
இந்த நிலையில், சுந்தர்.சி.க்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று சினேகா கூறியிருப்பதை கோலிவுட்டில் குசுகுசுவென்று பேசிக் கொள்கிறார்கள்.
சினேகாவிடம் இப்போது பள்ளிக்கூடம் மட்டுமே கையில் உள்ளது. புதிதாக எந்தப் படத்திலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் சுந்தர்.சி. படத்தை வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.
என்னமோ நடந்திருக்குப்பா!


Click it and Unblock the Notifications











