உதவி செய்வதில் விஷாலைப் பின்பற்றும் ஸ்ரீதிவ்யா
ராஜபாளையம்: விஷாலைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதிவ்யாவும் ராஜபாளையம் மக்களுக்கு கழிப்பறைகள் கட்ட நன்கொடை வழங்கியிருக்கிறார்.
ஸ்ரீதிவ்யா தற்போது முத்தையா இயக்கத்தில் மருது படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதற்காக விஷால், சூரி உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள மலையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதைத் தெரிந்து கொண்ட விஷால், அப்பகுதி நகராட்சி ஆணையர் தனலட்சுமியுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.
முதல்கட்டமாக 10 கழிப்பறைகளை கட்ட ரூ 80 ஆயிரத்தை நடிகர் விஷால் நகராட்சி ஆணையர் தனலட்சுமியிடம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் தனது பங்கிற்கு ரூ 80 ஆயிரத்தை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து நடிகர் விஷால் "ஸ்ரீதிவ்யா ராஜபாளையம் மக்கள் கழிப்பறைகளை கட்டிக்கொள்ள ரூ 80 ஆயிரத்தை வழங்கியிருக்கிறார்.
அவருக்கு நன்றி. மருது படக்குழுவினரிடம் இருந்து இன்னும் நிறைய உதவிகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்த்தி மீதமிருக்கும் மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர மருது படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இன்னும் 10 நாட்களில் இப்படப்பிடிப்பு முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து மருது குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











