#ஜோதிகா... பிரம்மா இயக்கத்தில் ஜோவின் புதுப்பட ஷூட்டிங் ஆரம்பம்... டிவிட்டரில் டிரெண்டானார்!
சென்னை: குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் 36 வயதினிலே படத்தில் அவர் நடித்தார். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிரம்மாவின் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடிக்கிறார்.
ஷூட்டிங் ஆரம்பம்...
இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

குற்றம் கடிதல்...
ஏற்கனவே, பிரம்மாவின் முதல் படமான குற்றம் கடிதல், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக இருந்தது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் அப்படம் வென்றது

எதிர்பார்ப்பு...
இந்நிலையில் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் என்பதால் தற்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஜோதிகாவுடன் நீண்ட இடைவேளைக்குப் பின் பானுப்பிரியாவும் நடிக்க இருக்கிறார். அதோடு, ஊர்வசி, சரண்யா உள்ளிட்டவர்களும் நடிக்க இருக்கின்றனர்.

தாய்ப்பாசம்...
தாய்ப்பாசத்தை சித்தரிக்கும் படம் இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிராமத்து அம்மா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நடிப்புப் பயிற்சி...
முன்னதாக ஜோதிகா உட்பட இப்படத்தில் நடிப்பவர்கள் தனியே சிறப்பு நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டரில்...
இதற்கிடையே ஜோதிகாவின் புதிய பட ஷூட்டிங் இன்று சென்னையில் தொடங்கியுள்ளதால், டிவிட்டர் அவரது பெயர் டிரெண்ட் ஆகியுள்ளது. இப்படமும் ஜோதிகாவிற்கு வெற்றிப்படமாக அமைய நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











